தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ். விவசாயியான இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகள்கள்.
இளையமகள், குறுக்குச்சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த 10-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மகள் வீடு திரும்பாததால், காட்டுப்பகுதியில் தேடியுள்ளனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. மறுநாள் (11-ம் தேதி) காட்டுப்பகுதியின் அடர்ந்த முட்புதருக்குள் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனையடுத்து இத்தகவல் காட்டுத்தீயாய் பரவ ஊர் மக்கள் வேடநத்தம் – குறுக்குச்சாலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, ”குற்றவாளிகள் நிச்சயம் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்” என, அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஆகியோர் உறுதியளிக்க சாலைமறியலைக் கைவிட்டனர்.
ஆனால், வேடநத்தம் கிராமத்திற்குள் உயிரிழந்த மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள், ஊர்ப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.