மனமுருக வேண்ட மனக்கவலை தீர்ப்பாள்
குறிப்பாக பொன், பொருள், உறவுகள், தேகநலன், மன நிம்மதி என்று எதை இழந்து தவித்தாலும், தன்னருளால் அந்தத் தவிப்பைப் போக்கி இழந்தவற்றையும் மீட்டுத் தருபவள் இந்த அன்னை. மட்டுமன்றி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள், கெட்ட கனவுகளால் அச்சம் கொள்பவர்கள், வம்பு வழக்குகளால் துன்பம் கொள்பவர்கள் ஆகிய அனைவருக்கும் கண்கண்ட தெய்வமாக விளங்கிவருகிறாள் கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலாம்பிகை.
ஸ்ரீபாலாவுக்கு வலப்புறம் வாராகி சந்நிதி அமைந்திருக்கிறது. வெளிப் பிராகாரத்தில் கொடி மரத்துக்கு அருகில் சொர்ணாகர்ஷண பைரவர் அருள்கிறார். கோயிலின் தல விருட்சம் மஞ்சனத்தி மரம். இந்த மரத்தின் அடியில்தான் வாலை சித்தரும், காசியானந்தரும் ஸ்ரீவாலை பூஜை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மரத்தின் அடியில் உச்சிஷ்ட கணபதி அருள் தருகிறார்.
இந்த ஆலயத்தின் பெரும் விசேஷம் இங்கு அளிக்கப்படும் திருமாத்திரை. வாலை சித்தர் அன்று அளித்த அதே முறைப்படியே இன்றும் இங்கே திருமாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

மருந்தாகும் மஞ்சனத்தி
இந்தக் கோயிலில் உள்ள மஞ்சனத்தி இலை இரண்டு பங்கு, வேப்பிலை, வில்வ இலை, புளிய இலை ஒரு பங்கு சேர்த்து, கோயிலில் உள்ள அம்மியில் அரைத்து, அத்துடன் எலுமிச்சைச் சாறு, திருநீறு, கோயில் மண் சிறிது சேர்த்து அரைத்து, அதை 41 சிறு உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காய வைத்துத் தனியாக எடுத்து வைத்துக் கொள்வார்கள்.
இந்தத் திருமாத்திரையைத் தொடர்ந்து 41 நாள்கள் சாப்பிட்டு வர, அக – புற நோய்களுக்கு அருமருந்தாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வாலைசித்தருக்கும், காசியானந்த சுவாமிக்கும் வெள்ளை நிற வஸ்திரம் சாத்தி, வில்வமாலை அணிவித்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் வெற்றி பெறும், வாலாம்பிகைக்குச் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி, செவ்வரளி மாலை அணிவித்து, எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும் என்பதும் ஐதிகம்.
ஸ்ரீவாலையை உபாசிக்க வாழ்நாள் நீடிக்கும். வாய்ப்பிருப்பவர்கள் இந்தத் தலத்துக்குச் சென்று சித்தர் பெருமக்களையும் ஸ்ரீவாலாம் பிகையையும் வழிபட்டு வாருங்கள்; குருவருளாலும் அம்பிகையின் திருவருளாலும் வளமான வாழ்வை வரமாகப் பெறுவீர்கள்.