சென்னை: தூய்மைப் பணியை தனியாருக்கு ஏன் கொடுக்க வேண்டும்? பிறகு அரசுக்கு என்ன வேலை?, எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்க்கும் அரசு மதுபானத்தை மட்டும் தானே விற்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தூய்மைப் பணியாளருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அவர் வெளியிட்ட அறிக்கையில் 10 முதல் 12 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த 12 ஆயிரம் பேரை திடீரென பணி நீக்கும் செய்தது மிகவும் வேதனை அளிக்கிறது என தெரிவித்திருந்தார்.
நகரை தூய்மையாக்கும் பணியை தனியாருக்கு அளிப்பதன் அவசியம் என்ன இருக்கிறது? பிறகு அரசுக்கு என்ன வேலை?, எல்லாமே தனியார் மயம் என்றால் அரசு இங்கே என்ன செய்கிறது என்ற கேள்வி பொதுவாக எழுகிறது. போக்குவரத்து, கல்வி, மருத்துவம், சாலை போடுதல், பராமரித்தல், மின் உற்பத்தி விநியோகம் என அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
சாராயக்கடையை மட்டும் அரசு ஏற்று நடத்தும் என்பதை ஏற்றுக்கொள்கிறதா இந்த சமூகம். நாம் மூக்கை பிடித்துக் கொண்டு போடும் குப்பைகளை அவர்கள் மூழ்கி எடுத்து சுத்தம் செய்கிறார்கள். ஆந்திராவை சேர்ந்த நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ.2,700 கோடியை அரசு தருகிறது;
12 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துள்ள தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதில் என்ன இடையூறு உள்ளது. இதில், தமிழக அரசில் போதிய நிதி இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்களின் கீழ் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது.
மதுரையில் கலைஞர் கருணாநிதி பெயரில் ரூ.200 கோடியில் கட்டப்பட்ட நூலகத்தில் எத்தனை பேர் படித்துக் கொண்டிருக்கின்றனர். மகாபலிபுரத்தில் ரூ.540 கோடியில் கலையரங்கம் கட்டியது எதற்காக? தமிழ்நாட்டில் தேவையில்லாத தண்டச் செலவுகள் எவ்வளவு என சொல்லுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.