கேரள மாநிலம் அச்சன்கோவிலில் உள்ள ஐயப்பனுக்கு மண்டல பூஜை அன்று திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். அச்சன்கோவில் மண்டல மகோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
35 ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பர்யம்:
பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழாவிற்காக சுவாமியின் திருவாபரணங்கள் கடந்த 35 ஆண்டுகளாக தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்பு பக்தர்கள் தரிசனத்திற்காகக் கொண்டுவரப்படுகிறது.
இந்த ஆண்டு 36-ஆம் ஆண்டை முன்னிட்டு, தமிழக பொறுப்பாளரும் திருவாபரண கோஷயாத்திரை பொறுப்பு அதிகாரியுமான தென்காசி ஹரிஹரன் குருசாமி தலைமையில் புனலூரில் இருந்து சிறப்பு வாகனத்தில் எடுத்து வரப்பட்டது.

திருவாபரணப் பெட்டியில் உள்ளவை:
திருவாபரணப் பெட்டியில் சுவாமியின் திருமுகம், மார்பு, கைகள், கால்கள், பெரிய கிரீடம் உள்ளிட்ட ஆபரணங்கள் இடம்பெற்றுள்ளன. ஐயப்பனே தன் உடல் வாளாக வைத்திருந்ததாகக் கூறப்படும், நேரத்திற்கு நேரம் இடத்திற்கு இடம் எடை வேறுபடும் காந்தமலை மாயத் தங்க வாளும் இந்த திருவாபரணப் பெட்டியில் அடங்கும்.
புனலூர் அரசு கருவூலத்திலிருந்து இன்று காலை எடுத்து வரப்பட்ட திருவாபரணப் பெட்டி, புனலூர் கிருஷ்ணன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகளுடன் தென்காசிக்குப் புறப்பட்டது.