மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியே சித்தர் பூமிதான். அகத்தியர் அங்கே வாசம் செய்து சித்தர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கி சிவத்தொண்டையும் முருக பக்தியையும் அனைவருக்கும் எடுத்துச் சொல்லிவந்தார்.
எனவேதான் அங்கே உள்ள பல மலைத் தலங்களில் முருகப்பெருமான் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அத்தனை முருகன் கோயில்களும் சாந்நித்தியம் நிறைந்தவை. தனித்துவம் வாய்ந்தவை.
ஒருமுறை சென்று தரிசனம் செய்தால் மீண்டும் மீண்டும் தரிசனம் செய்யும் ஆவலைத் தூண்டுபவை. அப்படிப்பட்ட ஓர் ஆலயம்தான் நாதகிரி முருகன் கோயில்.
ராஜபாளையம் – தென்காசி மார்க்கத்தில், சிவகிரி தாலுகாவில் கூடலூர் எனும் பகுதியில் அமைந்துள்ளது இந்த மலைக்கோயில். மலைக்குமேல் அழகுற கோயில் கொண்டிருக்கிறார் பாலமுருகன்.
இத்தலத்தை அருணகிரியார் பாடியிருக்கிறார். பக்தர்கள் இதை சித்தர் மலை, தெய்வ மலை, சஞ்சீவி மலை, முக்திமலை, முருகாசலம், தவமலை, ஞானகிரி, பிரம்மகிரி, தீர்த்தகிரி, பதுமகிரி எனப் பல திருப்பெயர்களால் புகழ்கிறார்கள்.

வேலேந்திய வண்ணம் கட ஹஸ்தத்துடன் திகழும் முருகப் பெருமான், இங்கே அபய – வரத ஹஸ்தத்துடன் அருள்கிறார். இந்தத் திருக்கோலம் காண்போரை வியக்க வைப்பதோடு ஆகர்ஷிக்கவும் செய்கிறது.
கஷ்டத்தால் கலங்கும் பக்தர்களுக்கு அபயக் கரம் காட்டி அருளும் முருகனைக் கண்டதும் நம் கஷ்டங்கள் கலைந்தோடிப்போகின்றன. இங்கே முருகப்பெருமாள் சிவ, விஷ்ணு அம்சத்துடன் திகழ்வதாக ஐதிகம். அதனாலேயே வரத ஹஸ்தத்துடன் அமைத்தனர் என்கிறார்கள், பெரியோர்கள்.