தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைப்பு விவகாரம்: “இப்ப என்ன அவசரம்?” – மூத்த தலைவர் புஜ்பால் கேள்வி | Nationalist Congress Party factions unlikely to merge immediately: Senior leader Bhujpal asks what’s the hurry

Spread the love

மகாராஷ்டிராவில் சரத்பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சி 2023 ஆம் ஆண்டு இரண்டாக உடைந்தது.

சரத்பவாரின் சகோதரர் மகன் அஜித்பவார் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களுடன் சென்று ஒட்டுமொத்த கட்சியையும் தன்வசப்படுத்திக் கொண்டார். ஆனால் தற்போது அஜித்பவார் விமான விபத்தில் காலமாகிவிட்டார். அவர் உயிரோடு இருந்தபோது மகாராஷ்டிராவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தேசியவாத காங்கிரஸின் இரண்டு பிரிவுகளும் புனே மாவட்டத்தில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.

அதோடு தேர்தலுக்குப் பிறகு இரண்டு அணிகளை இணைக்க அஜித்பவார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

அஜித்பவார் பிப்ரவரி 12ம் தேதி இரு அணிகளையும் இணைக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் இப்போது அஜித்பவார் இல்லாத காரணத்தால் அந்த இணைப்பு திட்டமிட்டபடி நடக்கவில்லை.

அதோடு அஜித்பவார் மரணத்திற்குப் பிறகு அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவார் துணை முதல்வராகப் பதவியேற்று இருக்கிறார்.

சுனேத்ரா பவார்

சுனேத்ரா பவார்

இப்போது இரு அணிகளும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. அஜித்பவார் கட்சியில் சில மூத்த தலைவர்கள் இரு அணிகளின் இணைப்புக்குச் சாதகமாக இல்லை என்று கூறப்படுகிறது.

அதேசமயம் அஜித்பவார் மனைவியை கட்சியின் தேசியத் தலைவராக மாற்ற அவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர் சகன் புஜ்பால் அளித்த பேட்டியில், “‘இப்போது சுனேத்ரா பவாரை கட்சியின் தேசியத் தலைவராக்குவதுதான் கட்சியின் முக்கிய திட்டம். சுனேத்ரா துணை முதல்வராகப் பதவியேற்கும்போதே கேள்வி எழுப்பினார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைவதில் என்ன அவசரம்? அது இன்றோ நாளையோ அல்லது மூன்று மாதம் கழித்தோ நடக்கலாம்.

எதற்காக அதற்கு நிர்ப்பந்தம் கொடுக்கவேண்டும். என்னைப் பொறுத்தவரை இப்போது இரு அணிகளும் இணைவது தொடர்பான திட்டம் இல்லை. இப்போதுதான் சுனேத்ரா பவார் துணை முதல்வராகி இருக்கிறார்.

அவர் விரைவில் கட்சித் தலைவராக மாறுவார். இது 100 சதவீதம் நடக்கும்” என்று தெரிவித்தார்.

சுனேத்ரா பவாருக்கு அரசியலில் அனுபவம் இல்லாத காரணத்தால் கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் உட்பட சிலர் கட்சியைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அஜித்பவார் இருந்தபோது இரு அணிகளும் இணைய அஜித்பவார் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக சரத்பவாரும் குறிப்பிட்டு இருந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *