மதுரை: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரும். இன்னும் சில மாதங்களில் முழு வடிவம் பெற்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக, பாஜக கூட்டணி வெற்றிக் கூட்டணி. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். அதேபோல, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து செயல்படலாம். சென்னையில் 13 நாட்களாகப் போராடிய தூய்மைப் பணியாளர்களை, மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்தது கண்டிக்கத்தக்கது.
தென் மாநிலங்களில் அதிக அளவு சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆட்சி, அதிகாரம், பண பலத்தை வைத்து தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று திமுக கருதுகிறது. ஆனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள். பிஹாரில் படுதோல்வி அடையும் என்பதால், தேர்தல் ஆணையம் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி முன்வைத்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரும். சில மாதங்களில் முழு வடிவம் பெற்று, இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.