சென்னை: தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையிலான மேம்பாலப் பணியை நேற்று முன்தினம் நள்ளிரவில் பார்வையிட்ட அமைச்சர் எ.வ.வேலு, பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். சென்னை, அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, மேம்பாலம் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த மேம்பாலத்தில் இரும்பு உத்திரங்கள் பொருத்தும் பணிகளை, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவில் பணிகள் தொடங்கின. அப்போது பொதுப்பணித்துறை அமைச்சர்எ.வ.வேலு பார்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கினார்.
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.20 கி.மீ. நீளமுடைய இந்த மேம்பாலத்தில் அடித்தளப் பணிகளும், இரும்புத் தூண்கள் அமைக்கும் பணிகளும் ஏற்கெனவே நிறைவுபெற்ற நிலையில், மேம்பாலக் கட்டுமானத்தில் மிக முக்கியமான கட்டமாகக் கருதப்படும் இரும்பு குறுக்கு உத்திரங்கள் பொருத்தும் பணி நேற்றுமுன்தினம், நள்ளிரவு தொடங்கியது. ஒவ்வொரு உத்திரமும் 22 டன் எடையுடையது. குறுக்கு உத்திரம் 9 டன் எடை கொண்டது.
ஒரு பாலக்கண்ணுக்கு 5 உத்திரங்கள் மற்றும் 2 குறுக்கு உத்திரங்கள் பொருத்தப்படுகின்றன. அந்த வகையில், ஒரு பாலக்கண்ணில் மொத்தம் 110 டன் எடையுள்ள இரும்பு கட்டமைப்பு அமைக்கப்படும். இவ்வளவு பருமனான இரும்பு உத்திரங்களை தூக்குவதற்காக உயர்திறன் கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கு.கோ.சத்தியபிரகாஷ், நெடுஞ்சாலைத் துறை சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் இரா.சந்திரசேகர், கண்காணிப்புப் பொறியாளர் வி.சரவணசெல்வம் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தினர் உடனிருந்தனர்.