தேமுதிகவுக்கு 10 சீட் 1 ராஜ்யசபா டீல் ஓவர்: அதிரடி காட்டும் அறிவாலயம், அதிர்ச்சியில் காங்கிரஸ் – Kumudam

Spread the love

தேமுதிக எந்த கூட்டணியில் இணையப்போகிறது என்ற கேள்வி எழுந்தது. அக்கட்சியை தங்கள் கூட்டணியில் இணைக்க திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவியது.  அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக, அமமுக போன்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் தேமுதிக திமுக கூட்டணியில் முதல்முறையாக இணைந்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. கடந்த 2016ம் ஆண்டு திமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி மிகப்பெரிய அளவில் முயற்சி மேற்கொண்டார். ஆனால் தேமுதிக தலைமையிலான மக்கள் நல கூட்டணி அமைந்து வாக்குகள் பிரிய இரண்டாவது முறையாக அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. 

இந்நிலையில் இன்று காலை அறிவாலயம் வருகை தந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணி இணைத்து கொண்டார். இந்த சந்திப்பு குறித்து ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்,  அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!

சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் @PremallathaDmdk  அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.

கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு – நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!  #DravidianModel ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்! என குறிப்பிட்டுள்ளார். 

சந்திப்புக்கு பின் அறிவாலயத்திற்கு பிறகே செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்: தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பப்படி திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். 2016ம் ஆண்டிலேயே திமுகவுடன் கூட்டணி அமைக்க விஜயகாந்த் விரும்பினார். விஜயகாந்த் இருக்கும் போது 2016 லேயே திமுகவுடன் கூட்டணி அமைந்திருக்க வேண்டியது

10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விஜயகாந்த் விருப்பம் நிறைவேறியுள்ளது. 2016ம் ஆண்டிலேயே தேமுதிகவை திமுக கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கூட்டணியில் இணையாவிட்டாலும் தேமுதிக, திமுக தலைவர்கள் இடையே நட்பு தொடர்ந்து நீடித்தது. விஜயகாந்த் மறைவின்போது அரசு சார்பில் அவரது இறுதிச்சடங்கு, இறுதி ஊர்வலத்துக்கு விரிவான ஏற்பாடுகள் செய்து தரப்பட்டது. 

திமுகவுடன் முதல்முறையாக கூட்டணி அமைத்துள்ளோம். கூட்டணிக்கு மக்களிடையே பெரிய வரவேற்பு இருக்கும். 200+ தொகுதிகளை வெல்வோம். அதை வெல்வதே எங்கள் இலக்கு. தொகுதிப் பங்கீடு குறித்து குழு முடிவு செய்து அதனை முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார். 

அமைச்சர்கள் ஏ.வ.வேலு, கே.என்.நேரு ஆகியோர் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வரும் பொறுப்பை ஸ்டாலின் ஒப்படைத்து இருந்தார். இருவரும் தொடர்ந்து தேமுதிக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி திமுக கூட்டணியில் இணைத்துள்ளனர். 10 தொகுதி 1 ராஜ்யசபா சீட் தேமுதிக ஒதுக்கப்படுவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *