தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. கட்சி மாறுதல், கூட்டணி மாறுதல், கூட்டணிப் பேச்சுவார்த்தை போன்றவற்றுக்கு இனி பஞ்சமிருக்காது.
அதில் ஒருவர்தான், இன்று திமுகவில் இணைந்துள்ள ஒரத்தநாடு எம்.எல்.ஏ வைத்திலிங்கம்.
அதிமுகவின் சீனியர், முன்னாள் அமைச்சர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர் என அதிமுகவின் மிக முக்கியமானவராக இருந்தவர் வைத்திலிங்கம்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா Vs ஓ.பன்னீர்செல்வம் என்கிற நிலை வந்தபோது, இவர் ஓ.பி.எஸ்ஸை டிக் செய்தார்.

பின்னர் ஓ.பி.எஸ் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் இணைந்தபோதும், ஓ.பி.எஸ்ஸிற்குத் தூணாகவே நின்றார்.
இ.பி.எஸ், ஓ.பி.எஸிக்குத் தலைமைச் சண்டை வந்து இருவரும் பிரிய, அப்போது ஓ.பி.எஸ்ஸுடனேயே தொடர்ந்தார்.
ஆனால், இப்போது திமுகவில் சேர்ந்துள்ளார் வைத்திலிங்கம்.
இன்று காலை சபாநாயகர் அப்பாவுவைச் சந்தித்து தனது ஒரத்தநாடு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் இவர். அடுத்தது, அறிவாலயம் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்பு திமுகவில் இணைந்துள்ளார்.