திருச்சி: தேர்தல் ஆணையத்தை கண்டித்து நவ.11 ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருச்சி திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தில்லைநகரில் உள்ள முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மத்திய மாவட்ட செயலாளர் க.வைரமணி தலைமை வகித்தார். வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, மாநகர செயலாளர் மேயர் மு.அன்பழகன் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், ‘மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் வருகின்ற நவ.11-ம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எஸ்.ஐ.ஆர் கொண்டு வந்துள்ள இந்திய தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை மிக சிறப்பாக நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபடுவது.
நாட்டில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் எஸ்.ஐ.ஆர்-க்கு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய அரசின் கைப்பாவையாகவும், ஏதேச்சதிகார போக்குடனும் செயல்பட்டு வரும் இந்திய தேர்தல் ஆணையத்தை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது’ ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனிடையே கூட்டத்தில், திமுக சார்பில் மத்திய ஒன்றிய செயலாளர் அந்தநல்லூர் கதிர்வேல், பகுதி செயலாளர் மோகன்தாஸ், கவுன்சிலர் நாகராஜ், திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் எல்.ரெக்ஸ், கலை, கோவிந்தராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன், புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சிவா, மாநகராட்சி கவுன்சிலர் சுரேஷ், விசிக மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், கலைச்செல்வன், ஆற்றல் அரசு, மண்டல செயலாளர் தமிழாதன், மதிமுக மாவட்ட செயலாளர் வெல்ல மண்டி சோமு, பகுதி செயலாளர் ஜங்ஷன் செல்லத்துரை, மமக மேற்கு மாவட்ட தலைவர் கவுன்சிலர் பைஸ் அகமது, மனிதநேய ஜனநாயக கட்சி மாநில இளைஞரணி செயலாளர் முகமது ஷெரீப், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹபீபுர் ரகுமான், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் மாநில செயலாளர் வெங்கடேசன், திக மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், மக்கள் நீதி மய்யம் மேற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், மாநகர செயலாளர் சீனிவாசன் உள்பட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.