வரும் ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒருவர் பணம் கொண்டு சென்றால், அதை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துவிடுவார்கள்.
நேற்று கூட, திருப்பூர் பல்லடத்தில் இப்படியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
ஈரோட்டை சேர்ந்தவர் நந்தினி. அவரது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்திருக்கிறார்.
சிகிச்சைக்காக தன்னுடன் ரூ.2 லட்சம் எடுத்து சென்றிருக்கிறார் நந்தினி.

இவர்களைப் பல்லடம் அருகே நிறுத்திய பறக்கும் படையினர், கார் முழுவதும் சோதனையிட்டுள்ளனர்.
அப்போது சிகிச்சைக்கு கொண்டு சென்ற ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்திருக்கின்றனர் பறக்கும் படையினர்.
நந்தினி ‘சிகிச்சை’க்காக என்று எவ்வளவோ எடுத்துக்கூறியும் பறக்கும் படையினர் செவி சாய்க்கவில்லை.
தேர்தல் சமயத்தில் பொதுமக்கள் இந்த மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
இப்படி பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் என்னென்ன தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளன என்றும், எந்தச் சிக்கலிலும் மாட்டாமல் இருப்பது எப்படி என்பதையும் இங்கே பார்க்கலாம்…
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, பொதுவாகவே ரூ.50,000-க்கு மேல் கையில் ரொக்கமாக தனிநபர் எடுத்து செல்லக்கூடாது.
மேலே சொன்ன சம்பவத்தில் நந்தினி, அவரது அம்மா மற்றும் கணவர் ஆகிய மூவர் காரில் பயணம் செய்திருக்கின்றனர்.

ஆளுக்கு ரூ.50,000 என்றாலும், மொத்தமாக ரூ.1.5 லட்சம் எடுத்து செல்லலாமே என்கிற கேள்வி எழுவது நியாயம் தான்.
மூவரும் ஒன்றாக சென்றிருக்கின்றனர்… அவர்களது கையில் ரூ.2 லட்சம் இருக்கிறது என்கிற போது, தானாக பறக்கும் படையினருக்கு சந்தேகம் எழும். அதனால், அவர்கள் அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
ஒரே வாகனத்தில் செல்லும் 3 – 4 நபர்கள் ஆளுக்கு ரூ.50,000 எடுத்து செல்ல முடியுமென்றால், தேர்தல் நேரத்தில் இதை பயன்படுத்தி பல லட்சங்கள் கைமாற்றப்படும்.
இதை தடுக்கவே, பறக்கும் படையினர் இவ்வளவு கெடுபிடி செய்கின்றனர்.
அதற்காக, தேர்தல் நேரத்தில் கல்யாணம், வீட்டில் விசேஷங்கள், மருத்துவ செலவு, அவசர செலவு என எதுவும் வராமல் இருக்காது. இந்தச் சூழல்களில் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டால், அந்தப் பணத்திற்கான உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை வைத்துக்கொள்ளுங்கள்.
ஒருவேளை, உங்கள் கையில் இருக்கும் பணத்தை வங்கியில் இருந்து எடுத்திருந்தீர்கள் என்றால், அதற்கான ரசீதை கூடவே எடுத்து செல்லுங்கள். இது உதாரணத்திற்குத் தான்.
உங்கள் கையில் இருக்கும் பணம் உங்களுக்கு எப்படி கிடைத்தது என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், உடனே பணம் உங்களுக்கே கொடுக்கப்பட்டுவிடும்.

வங்கி பரிவர்த்தனைகள் கூட…
தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறுகையில், “வங்கியில் நடக்கும் பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஆப்கள் கூட கண்காணிக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்திருக்கிறார்.
இதனால், வழக்கத்திற்கு மாறாக, ஒரு பெரிய தொகை வங்கிக் கணக்கிற்கு கிரெடிட் ஆனால், நிச்சயம் கேள்வி எழுப்பப்படும்.
அதனால், அந்தப் பணம் யாரிடம் இருந்து எதற்காக வந்தது என்கிற தரவுகளைக் கட்டாயம் வைத்துக்கொள்ளுங்கள்.
இது உங்களைத் தேவையில்லாத கெடுபிடிகள்… நடவடிக்கைகளில் இருந்து காக்கும்.
பறக்கும் படையினரின் கெடுபிடி பணமோடு மட்டும் முடிந்துவிடாது. தங்க நகைகள், விலை உயர்ந்த (பரிசுப்) பொருள்களுக்குக் கூட நீளலாம்.
அதனால், பணம் அல்லது விலை உயர்ந்த பொருள்கள் எதையும் எடுத்தோ, கொண்டோ செல்கிறீர்கள் என்றால், அவைகளுக்குத் தகுந்த ஆவணங்களை வைத்திருப்பது சால சிறந்தது.