Last Updated:
மண்ணச்சநல்லூர் திமுக எம்.எல்.ஏ. கதிரவன், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சொகுசு கார்களை பரிசாக வழங்கியதாக அதிமுக புகார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி மண்ணச்சநல்லூர் திமுக நிர்வாகிகளுக்கு, அத்தொகுதி எம்.எல்.ஏ. 7 சொகுசு கார்கள் பரிசாக வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் திமுக எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சொகுசு கார்களை பரிசாக வழங்கியதாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலத் தேர்தல் தேதிகளை கடந்த 15ஆம் தேதி இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அன்று மாலை முதல் ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தனது சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய கழக செயலாளர்களான காட்டுக்குளம் கணேசன், ராமச்சந்திரன், செந்தில்குமார், செந்தில் கார்த்திகேயன், சீனிவாச பெருமாள் மற்றும் பேரூர் கழக செயலாளர்களான ராஜசேகரன் மற்றும் மனோகரன் ஆகியோருக்கு புதியதாக எஸ்.யு.வி. வகையைச் சேர்ந்த உயர் ரக சொகுசு கார்களை பரிசாக வழங்கியிருப்பதாக தெரிகிறது.
இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என அதிமுக ஐடி விங் சார்பில் திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் இதுகுறித்து பேசிய அதிமுக நிர்வாகி நாகராஜன், “பரிசாக வழங்கிய கார்களை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எனவே தேர்தல் நடத்தை விதிகளை மீறிய இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
