இந்த நிலையில், காங்கிரஸ் தலைமை கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்திருப்பதாக செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக, ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை மாண்புமிகு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர் அவர்கள் தலைமையில் அமைத்திருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, திரு. சூரஜ் எம்.என். ஹெக்டே, செயலாளர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, திரு. நிவேதித் ஆல்வா, செயலாளர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, திரு. செ. ராஜேஷ்குமார், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை “ஐந்து உறுப்பினர் குழு’வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன்.
‘இந்தியா கூட்டணி’யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.