முந்துவது யார்?
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?”
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏழு தொகுதிகளில், பரப்பளவில் மிகச் சிறிய தொகுதியான திண்டுக்கல் தொகுதியில், விவசாயம், பூட்டுத் தயாரிப்பு, தோல் பதனிடும் தொழில்கள் ஆகியவைதான் பிரதானம்.
தொகுதியில், பிள்ளைமார், வன்னியர், இஸ்லாமியர் சமூகத்தினரே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக பட்டியல் சமூகத்தினர், நாயுடு, செளராஷ்டிரா சமூகத்தினரும் கணிசமாக இருக்கின்றனர். அ.தி.மு.க-வில், இந்த முறையும் சீனிவாசனுக்குத்தான் சீட் என்கிறார்கள். தி.மு.க-வில், இந்த முறை திண்டுக்கல் தொகுதியை கைப்பற்ற வேண்டுமென நினைக்கிறது.

அதோடு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு டஃப் கொடுக்கும் வேட்பாளரை களமிறக்கினால் மட்டுமே திண்டுக்கல் தொகுதியை கைப்பற்ற முடியும் என்பதால் திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், பழனி எம்.எல்.ஏ-வுமான ஐ.பி.செந்தில்குமார் இந்த தொகுதியில் களமிறங்க போவதாக கூறப்படுகிறது.

அதேசமயம், கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர் வெள்ளிமலையும் சீட் ரேஸில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் க.முத்தரசி என்பவர் போட்டியிடுகிறார். தவெக சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் தர்மர் என்பவர் சீட் கேட்கிறார்.
தற்போதைய சூழலில், திண்டுக்கல் தொகுதியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது!