கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயம்குளம் சட்டமன்ற தொகுதி கடந்த நான்கு தேர்தல்களில் தொடர்ச்சியாக சி.பி.எம் வசம் உள்ளது. அதற்கு முன்பும் பலமுறை சி.பி.எம் வென்றுள்ளது. இந்த தேர்தலில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த சிட்டிங் எம்.எல்.ஏ யு.பிரதீபா மீண்டும் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மாநில துணைத்தலைவர் எம்.லிஜூ போட்டியிடுகிறார். இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது காயம்குளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.லிஜு மேடையில் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. தேர்தல்களில் தொடர்ச்சியாக தோல்வியடைவதால் தன்னை பலரும் கேலியாக பேசுவதாகவும், அந்தப் பேச்சு இதயத்தை நொறுக்குவதாகவும், தனிப்பட்ட முறையில் மனச் சோர்வை ஏற்படுத்துவதாகவும் அவர் பேசியுள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர் எம்.லிஜூ காயம்குளம் தொகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடையில் பேசுகையில், “நான் எப்போதும் தோற்றுக்கொண்டே இருக்கிறேன் என்று மக்கள் சொல்வதைக் கேட்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. தோல்வியடைபவன் என எதிர் கட்சியினர் கிண்டலடிப்பது இதயத்தை நொறுக்குகிறது. அவர்கள் கேலி செய்வது என்னை தனிப்பட்ட முறையில் சோர்வடையச் செய்கிறது. ஆனால் அந்தத் தோல்விகளுக்காக நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. மக்கள் அளிக்கும் தீர்ப்பை நான் மதிக்கிறேன்.