வத்திராயிருப்பு: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அக்டோபர் 21ம் தேதி வரை சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஶ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் கடல் மட்டத்தில் இருந்து 3,500 அடி உயரத்தில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. சதுரகிரியில் 2015ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பின்னர் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப் படுகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தினசரி காலை 6 முதல் 10 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சதுரகிரி மலைப் பாதையில் உள்ள நீரோடைகள் மற்றும் கட்டாறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
சதுரகிரி மலைப் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி அக்டோபர் 21ம் தேதி வரை சதுரகிரி மலையேற தடை விதிக்கப்படுவதாக வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.