நாட்டார் தெய்வங்களின் தோற்றக்கதையில் பல்வேறு மாறுதல்கள் தோன்றினாலும், இன்றும் நெல்குதிருக்குள்ளும், தெரடுக்குள்ளும் புதைக்கப்பட்டிருக்கிற தெய்வங்களை கட்டியெழுப்பி அவைகளின் அவலங்களையும், கொடூரங்களையும் அறிந்து ஆராய வேண்டியது இக்காலத்தின் அவசியமாகிறது.
அவ்வாறு வெகுசனம் அறியாத ஆங்காரிகளின் கதைகளை அறிவோம்!
‘தொட்டிச்சியம்மைக்கு கருகமனி பாசியும் கரு வளையலும் நேந்து போடணும். அதுக்கு தான் விருப்பப்படுவா நம்ம தொட்டிச்சியம்மை’
“கிழக்க விருதுநகரு அருப்புக்கோட்ட பக்கத்துல செந்நெல்குடி ஊருல தான் தொட்டிச்சியம்மை பொறந்திருக்கா. பெரிய பணக்கார நாயக்கர் குடும்பத்து பிள்ளை இந்த தொட்டிச்சியம்மை.
அந்த வீட்டுல வேலைசெஞ்சிட்டு இருந்த கருப்பசாமிக்கும் தொட்டிச்சியம்மைக்கும் பழக்கம் இருந்திருக்கு. அவேன் தேவமாரு ஆளு. அந்த பிள்ளை அண்ணமாருக்கு பிடிக்காம ரெண்டு சனத்துக்கும் ஒத்துவராதுன்னு தொட்டிச்சியம்மைக்கிட்டயும் கருப்பசாமிக்கிட்டயும் சொல்லிப்பாத்திருக்கானுவ.
ஆனா ரெண்டு பேரும் கேக்காம ‘தான் கொண்ட காதல’ விடக்கூடாதுன்னு ஓடிப்போயிருதாவ. சங்கரன்கோவில்கிட்ட இருக்க மீன்துள்ளி ஊருக்கிட்ட இருக்கும் காட்டுக்குள்ள ஓடி மறைஞ்சி வாழுதாவ. அந்த காட்டுக்கிட்ட இருந்த மடைக்குடும்பர் பூலிக்குடும்பனுக்கு தெரிஞ்சி அவரோட பாதுகாப்புல ரெண்டு பேரும் நல்லாபடியா வாழ்ந்திட்டு வந்திருக்காவ.
இப்படி ரெண்டு பேரும் குடும்பத்து மானத்தக் கெடுத்துட்டானுவள, இவங்கள சும்மாவிடக்கூடாது எப்படியாச்சி கொன்னு போட்டுறனும்ன்னு தொட்டிச்சியம்மை அண்ணமாருவ ஒரு திட்டம் போடுதானுவ…
என்ன திட்டம்ன்னு கேட்டன்னா…
அந்த பிள்ளை தொட்டிச்சியம்மை ஆசைக்கு ஆசையா வளத்த நாயை அதன்போக்குல உட்டு அதயே பின்தொடர்ந்து போயிருக்கானுவ. அந்த வாயில்லாப்பூச்சியும் எதுவும் தெரியாம தொட்டிச்சியம்மையை கண்டுபிடிச்சி அவகிட்ட போய் நின்னுயிருக்கு. அதுக்கப்புறம் அந்த பிள்ளைக ரெண்டையும் துடிதுடிக்க கொன்னுட்டு வழிகாட்டுன நாயையும் கொன்னுப்போட்டுட்டு வந்துருக்கானுவ அவ அண்ணாமாருங்க.
இதை அந்தக் காட்டுக்குள்ள ஒளிஞ்சி நேருக்கு நேரா நின்னு பூலிக்குடும்பமும் அவரு பொண்டாட்டியும் பாக்காவ. அவையளுக்கு ஒண்ணு பண்ண முடியாம ஆத்தாமையும் வருத்தமுமா கண்ணீர் விட்டு அழுதுருக்காவ.
பூலிக்குடும்பருக்கும் அவரு பொண்டாட்டிக்கும் கொஞ்ச நாளு நல்ல உறக்கம் வராம கெட்ட கெட்ட கனவா வந்திட்டு இருந்திருக்கு. அதைப்போல அவரு பிள்ளைக்குட்டிகளுக்கும் உடம்பு சரியில்லையாமயே வந்திட்டு இருந்திருக்கு. ரெண்டு பேரும் என்ன காரணம்ன்னு தெரியாம முழுச்சிட்டு இருந்திருக்காவ.
அன்னைக்கு இராத்திரி ரெண்டுபேரு கண்ணு முன்னாடியும் வந்து தொட்டிச்சியம்மையும் கருப்பசாமியும் வந்து நிக்க பூலிக்குடும்பரும் அவரு பொண்டாட்டியும் கையெடுத்து கும்பிட்டு அழுதிருக்காவ.
‘துடிக்க துடிக்க எங்களை சங்கறுக்கைல ரெண்டு பேரும் என்ன செஞ்சிங்க? ஏன் எங்களை கொன்னாங்க?ன்னு கேள்வி கேட்டுருக்கு சாமி ரெண்டும். இவ ரெண்டு பேரும் பதில் சொல்ல முடியாம அழுதிருக்காவ. நீங்க ரெண்டுபேரும் தான் எங்க குலசாமி உங்களுக்கு கோவில் எடுத்து கும்பிடுதோம்ன்னு கையெடுத்து கும்பிட்டுருக்காவ. அதுக்கப்புறந்தான் தொட்டியம்மையும் கருப்பசாமியும் உங்க வாரிசுகளை நாங்க காப்போம்ன்னு சொல்லி சத்தியம் செஞ்சி கொடுத்திருக்கு.