வேலூர் அகரம்சேரியில், நேற்று நடைபெற்ற த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில், வினோத் கண்ணன் என்பவர் விஜய்யின் கவனத்தை ஈர்த்து பேசுபொருளாகவும் மாறியிருக்கிறார். விஜய் பேசி முடித்தப் பிறகு அவருக்கு வெள்ளியால் செய்யப்பட்ட இரட்டை போர் யானைகள் மற்றும் வேலூரின் அடையாளங்களில் ஒன்றான பிரசித்திபெற்ற பொற்கோயில் காட்சி மாதிரியை பரிசாக வழங்கினார் வினோத் கண்ணன்.
அப்போது, வினோத் கண்ணனை அழைத்த விஜய் அவரின் தோள்மீது கைப்போட்டு தட்டிக்கொடுத்தது, அனைவரிடமும் மிகுந்த கவனம் பெற்றது. போர் யானை பரிசுப் பொருளில் வினோத் கண்ணன் பெயருக்குக் கீழே `வேலூர் சட்டமன்றத் தொகுதி’ எனவும் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த பரிசுப்பொருளை விஜய் கையில் வாங்கியபோது, `இது வெள்ளி யானை மட்டுமல்ல, வேலூரின் வெற்றி யானை’ எனவும் முழங்கினர் த.வெ.க-வினர்.

யார் இந்த வினோத் கண்ணன்..?
த.வெ.க செயற்குழு உறுப்பினராக கட்சிப் பொறுப்பு வகிக்கும் வினோத் கண்ணன், வரும் சட்டமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதி த.வெ.க வேட்பாளராகக் களமிறங்க ஆயத்தமாகியிருக்கிறார். வேலூரில், `ஶ்ரீ மெமன்டோஸ்’ என்கிற பெயரில், விருது கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் விற்பனையகம் நடத்தி வரும் வினோத் கண்ணன், மாவட்டத்தைத் தாண்டி பெங்களூர் வரையிலும் டிராபி பிசினஸில் வேகம் காட்டுகிறார்.