அவசரத் தேவைகளுக்கென “எமெர்ஜென்சி ஃபண்டு’ சேர்த்து வைக்க வேண்டும் என்று பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனாலும், ஓர் அவசர பணத் தேவைக்கு சாமானியர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் தங்க நகைக் கடன்தான்.
பணத் தேவையின் அளவைப் பொறுத்து, தங்களிடம் இருக்கும் நகைகளை எடுத்துச் சென்று அடகு வைத்து தங்க நகைக் கடன் பெறுகிறார்கள். அரும்பாடுபட்டு வாங்கிய நகைகளைப் பாதுகாப்பாக அடகு வைக்க வேண்டும் என்பதற்காக, நிறைய பேர் வங்கிகளில் நகைகளை அடகு வைக்கிறார்கள்.

இந்நிலையில் சில வங்கிகளில் ஒற்றை வளையலை அடகு வைக்க அனுமதிப்பதில்லை. ஜோடி வளையலையும் சேர்த்துக்கொண்டு வந்தால்தான் அடகு வைக்க வங்கிகள் அனுமதிப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வங்கியாளர் மணியன் கலியமூர்த்தியிடம் பேசியபோது, “வங்கிகளில் குறிப்பிட்ட சில நகைகளை அடகு வைக்க வாங்கக்கூடாது என விதிமுறைகள் உண்டு. அதாவது, கோவில் சார்ந்த நகைகள், தட்டு, விளக்கு போன்ற பொருள்கள், தாலி போன்றவை இதில் வரும்.
அதே போல ஒற்றைக் கம்மலையும் அடகு வைக்க வாங்கமாட்டார்கள். திருடப்பட்டவையாக இருக்கலாம் என்பதால், இதுபோன்றவற்றை வங்கிகளில் அடகுக்கு வைக்க வாங்க மாட்டார்கள்.