வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரள அரசு டவுன்ஷிப் அமைத்து வீடு கட்டிக் கொடுத்துள்ளது. இதன் திறப்பு விழா கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி அரசு கட்டிக் கொடுத்த வீடுகளை பார்ப்பதற்காக சென்றிருந்தார். தனிப்பட்ட முறையில் சென்றிருந்ததால் தன்னுடைய வருகை குறித்து யாரிடமும் அவர் தெரிவிக்கவில்லை.
மம்மூட்டி வருகை குறித்து தகவல் அறிந்து சிபிஎம் வயநாடு மாவட்ட செயலாளர் ரபீக் தலைமையில் ஏராளமானோர் அங்கு திரண்டனர். மம்மூட்டி சென்ற அனைத்து இடங்களுக்கும் ரபீக்கும் உடன் சென்றார். இதனால் எரிச்சலடைந்த அவர், என்னுடன் நீங்கள் எல்லா இடங்களுக்கும் சேர்ந்து வர வேண்டாம். இதைப் பார்ப்பவர்கள் நீங்கள் தான் என்னை அழைத்து வந்ததாக நினைப்பார்கள் என கூறினார்.
நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வீடு கட்டிக்கொடுத்தது குறித்து நிருபர்கள் மம்மூட்டியிடம் கேட்டபோது, அரசு வீடு கட்டிக் கொடுக்கவில்லை, இது மக்கள் கொடுத்த வரிப்பணத்தில் தான் கட்டப்பட்டுள்ளது என கூறினார். மம்மூட்டியின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் மார்க்சிஸ்ட் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இது மம்மூட்டிக்கு மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மம்மூட்டியிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளார். நேற்று திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையிவ்: கேரளாவின் நன்மைகளுக்காக எப்போதுமே ஆதரவு தெரிவித்தவர்களில் மம்மூட்டி ஒரு முக்கியமான நபர் ஆவார். சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்புவது தவறாகும். அதற்காக நான் மம்மூட்டியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
