டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் சிறையில் இருக்கும் அவரது தொழிலதிபரான அவரது கணவரை வெளியில் கொண்டு வர உதவுவதாகக் கூறி ரூ.200 கோடி வாங்கி மோசடி செய்த வழக்கு, இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷனிடமிருந்து வாங்கித்தருவதாகக் கூறி தினகரனிடம் பணமோசடி செய்தது எனப் பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர் சுகேஷ் சந்திரசேகர்.
சுகேஷ் சந்திரசேகர் டெல்லி திகார் சிறையில் இருந்தபோது மாடல் அழகிகள், நடிகைகளை சிறைக்கே வரவைத்து அவர்களுக்கு பணமும், பரிசுப் பொருள்களும் கொடுத்தார்.
அப்படி சிறைக்கு வராதவர்களுக்கு கூரியர் மூலம் விலையுயர்ந்த பொருள்களை அவர்களது வீட்டிற்கே அனுப்பி வைத்தார். அப்படி வீட்டிற்கே பரிசுப் பொருள்களை அனுப்பியதில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் ஒருவர். ஜாக்குலின் பெர்னாண்டஸ் சுகேஷிடமிருந்து பல கோடி ரூபாய் பரிசுப் பொருள்களைப் பெற்றுள்ளார்.

இருவரும் தம்பதி போன்று வாழ்ந்தனர். ஆனால் சுகேஷ் கொடுத்த பரிசுப் பொருள்களை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்துவிட்டது.
சுகேஷ் சிறையில் இருந்து பரோலில் வந்தபோது அவரைத் தனி விமானத்தில் சென்னைக்குச் சென்று ஜாக்குலின் பெர்னாண்டஸ் பார்த்து வந்தார். இதனால் சுகேஷ் மீதான மோசடி வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜாக்குலின் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜாக்குலின் பெர்னாண்டஸ், தான் நிரபராதி என்றும், சுகேஷ் தொடர்பான விசாரணையில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தொடர்ந்து கூறி வருகிறார்.
விசாரணையில் உள்ளதாகக் கூறப்படும் நிதிக்குற்றங்களுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவரது சட்டப் பிரதிநிதிகள் முன்பு கூறியுள்ளனர்.
சுகேஷ் சிறையில் இருந்தாலும், கிறிஸ்துமஸ், காதலர் தினம், புத்தாண்டு என முக்கிய பண்டிகைகளுக்கு ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு பரிசுகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது காதலர் தினத்திற்கு சுகேஷ் காதல் பரிசாக ஹெலிகாப்டர் ஒன்றை ஜாக்குலினுக்கு வழங்கி இருக்கிறார்.