`நடிகை மீது தரம் தாழ்ந்த விமர்சனம்; மனநிலையும் வளர்ப்புமே..!' – சி.வி.சண்முகத்திற்கு குஷ்பு கண்டனம்

Spread the love

விழுப்புரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறியதாக, தி.மு.க அரசை கண்டித்து மாநிலங்களவை எம்.பி சி.வி.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய சி.வி.சண்முகம், “அப்துல் கலாம் அவர்கள் ‘கனவு காணுங்கள்’ என்று சொன்னார். ஆனால் இவர் ஒரு படி மேலே போய், ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள், நான் நிறைவேற்றுகிறேன்’ என்கிறார். எனக்கு ‘பிரபலமான நடிகை ஒருவர் வேண்டும்’ என்று கேட்டால் இவரால் அந்தக் கனவை நிறைவேற்ற முடியுமா?” என்று நடிகையின் பெயரை வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார்.

சி.வி.சண்முகத்தின் அரசியல் நாகரிகமற்ற பேச்சுக்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் நடிகையும், தமிழக பாஜக துணைத் தலைவருமான குஷ்பு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “பெண்கள், குறிப்பாக நடிகைகள் யாருடைய சொத்தும் கிடையாது. ஒரு நடிகையின் பெயர் மலிவான நகைச்சுவைகளுக்கோ, அற்பமான அவதூறுகளுக்கோ அல்லது ஒருவரின் வாதத்தை நியாயப்படுத்துவதற்கான கருவியோ கிடையாது.

ஒரு பெண்ணின் அடையாளத்தைப் பயன்படுத்தி மற்றவர்களை கேலி செய்வதும் அல்லது ஒரு கருத்தை நிரூபிக்க முயல்வதும், பேசுபவரின் மனநிலையையும் வளர்ப்பையுமே வெளிப்படுத்துகிறது. இதுவே போதும், இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாது.

இந்த உலகில் ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணிடமிருந்தே பிறக்கிறார். ஒரு நடிகையைப் பற்றி சாதாரணமாகக் கருத்து தெரிவிக்கும் முன் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், இதே உதாரணம் உங்கள் தாய், சகோதரி, மனைவி, மகள் அல்லது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவராக இருந்தால் நீங்கள் இதேபோல் பேசுவீர்களா என்று?

ஒரு நடிகை பொது வாழ்வில் அறியப்பட்டவராக இருக்கலாம், ஆனால் அவர் பொதுச்சொத்து அல்ல. மற்ற துறைகளில் உள்ள பெண்களுக்கு நீங்கள் அளிக்கும் அதே மரியாதையை பெண் நடிகைகளுக்கும் கொடுங்கள்.

குஷ்பு
குஷ்பு

இப்படியான தரம் தாழ்ந்த விமர்சனங்களைச் செய்பவர்கள், தாங்கள் பேசும் பெண்ணுக்கு அவமானத்தை தேடித்தருவதில்லை. மாறாக, தங்களுடைய குறுகிய மனப்பான்மையையும், தவறான வளர்ப்பையும், அடிப்படை மனிதநேயமற்ற தன்மையையுமே வெளிச்சம் போட்டுக்காட்டிக்கொள்கிறார்கள். இது வெறும் அவமரியாதை மட்டுமல்ல, இது மனிதகுலத்திற்கே ஒரு அவமானம்” என, சி.வி.சண்முகத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *