மும்பை கோவண்டி பகுதியைச் சேர்ந்த ஷிபாஷேக் (19) என்ற பெண் தனது வீட்டில் இருந்து மாலை நேரத்தில் தேநீர் அருந்துவதற்காக வெளியில் வந்தார். அப்பெண்ணை யாரோ மர்ம நபர் துப்பாக்கியால் அருகில் இருந்து சுட்டனர்.
இதில் அப்பெண் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனே இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அவரை அருகில் உள்ள சதாப்தி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் அவரைச் சோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அப்பெண்ணின் நெஞ்சு, கழுத்துப் பகுதியிலும், தலையிலும் துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்திருந்தன.
அப்பெண்ணிற்கு அருகில் நின்று யாரோ சுட்டிருக்கவேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். குற்றப்பிரிவு போலீஸாரும் தனியாக விசாரித்தனர்.
முக்கோண காதலால் கொலை
போலீஸார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் அதே பகுதியைச் சேர்ந்த குட்டு(23) என்பவரைக் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. குட்டுவை அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண்ணும் விரும்பியதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக இரு பெண்களுக்கும் இடையே மோதல் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இம்மோதல் காரணமாகவே ஷிபா ஷேக் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று போலீஸார் தெரிவித்தனர்.