ஊழலுக்காக சிறை…
தமிழக அரசியல் தலைவர்கள் சிறைவாசங்களில் முக்கியமான ஒன்று ஜெயலலிதாவின் சிறைவாசம். ஊழல் வழக்கில் ஒரு முதல்வர் கைதாவது முதன்முறை என்று சொல்லும் அளவுக்கு அவரது கைது அமைந்தது. வருவாய்க்கு அதிகமான சொத்துச் சேர்த்த வழக்கில் (Disproportionate Assets Case) 2014 செப்டம்பர் 27-ல் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் 4 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. 2000-ல் டான்சி நிலபேர வழக்கிலும் அவர் கைதாகி, பின் விடுவிக்கப்பட்டார். மக்கள் பிரச்சினைகளுக்காக அல்லாது ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக ஜெயலலிதா சிறைசென்று வந்தார்.
சீமானும் சிறைவாசமும்:
தமிழ்த் தேசியம் தான் எங்களது கொள்கை என்று முழங்கி இன்றளவும் அரசியல் செய்துவரும் சீமான், ஈழத் தமிழர்களுக்காக மேற்கொண்ட போராட்டங்களால் தமிழக மக்கள் மத்தியில் கவனம் பெற்றார். இன்றளவும் மேடைகளில் அவர் ஈழத் தமிழர்கள் பற்றி பேசித்தான் வருகிறார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம், இலங்கை உள்நாட்டுப் போரில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சீமான் கைது செய்யப்பட்டார். காலாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
அதேபோல், 2011-ம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்தார். சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது சீமான் கைது செய்யப்பட்டு. அப்போது 5 மாதங்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த இரண்டு முக்கிய சிறைப் படலம் போக, அவ்வப்போது மக்கள் பிரச்சினைகள் பலவற்றை முன்னிறுத்தி சீமான் சிறை செல்வது புதிய கதை அல்ல.
அரசியல் செய்வதும் ஒரு கலையே. அதை சுயலாபத்துக்காக செய்பவம் அரசியல்வாதி ஆகிறான். பொதுநல சிந்தையோடு செய்பவன் தலைவனாகிறான். இது தேர்தல் காலம் என்பதால், தன்னலமற்ற தலைவர்களே நாட்டுக்கு அவசியம்.!