நம்பிக்கை விருதுகள் 2025 : நேரில் கண்டு நெகிழ வேண்டுமா? பதிவு செய்யுங்க, அனுமதி இலவசம்! | Nambikkai awards 2025 event registration

Spread the love

நம்பிக்கைதான் ஆகப்பெரிய வாழ்வாதாரம். அதைப் பற்றிக்கொண்டே மனித இனம் எல்லாப் பேரிடர்களையும் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறது. சக மனிதர்களுக்கு அன்பையும் கருணையும் பகிர்ந்தளித்து, நம்பிக்கையூட்டுகிற அக்கறை மனிதர்களை கொண்டாடுவது ஊடகத்துக்கான அறங்களில் ஒன்று. ஆனந்த விகடன் ஒவ்வோராண்டும் அப்படியான மனிதர்களை அடையாளம் கண்டு நம்பிக்கை மனிதர்களாக சமூகத்தின் முன் நிறுத்துகிறது.

பழங்குடிகளின் நல்வாழ்வுக்காக போராடுபவர்கள், மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்குரலாக ஒலிப்பவர்கள், அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக களமாடுபவர்கள், திரைக்கலையை களங்கமில்லாமல் மக்களின் இதயத்துக்கு நெருக்கமாக எடுத்துச் சென்றவர்கள், வாய்ப்பற்ற குழந்தைகளின் எதிர்காலத்துக்காக தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள், தடைகளை உடைத்து விளையாட்டுகளில் உச்சம் தொட்டவர்கள், வணிகம் கலங்காமல் சேவையாக மருத்துவத்தை முன்னெடுத்துச் செல்பவர்கள் என 2025-ம் ஆண்டிலும் மனிதம் காத்தவர்கள் ஏராளம்!

அடுத்தடுத்த தலைமுறைகள் ஒளிர ‘ஆனந்தம்’ அமைப்பு தந்த வெளிச்சம், மருத்துவத்தை சேவையென்றே கொள்கை வகுத்து இயங்கும் டாக்டர் முரளி, உறவில்லாதோர் உடல்களைப் பெற்று அவரவர் மத வழக்கப்படி நல்லடக்கம் செய்யும் மாமனிதர் அமீர் ஹம்சா, உயிர் கொடுத்து மலை காத்த ஜகபர் அலி, கணவனைக் கொன்ற காவல் கறுப்பாடுகளை ‘கைதியாக வெள்ளுடை தரிக்க வைப்பேன்” என்று சபதம் செய்து நிகழ்த்திக் காட்டிய வைராக்கிய மனுஷி கிருஷ்ணம்மாள், பாதிக்கப்படும் குழந்தைகளை அரவணைத்து ஆற்றுப்படுத்தி அரணாக இருந்து சட்ட உதவிகள் வழங்கும் ‘துளிர்’ அமைப்பு, பிற்போக்குச் சங்கிலிகளை அறுத்தெறிந்த வீர மங்கைகளில் ஒருவர் ‘கபடி’ கவிதா, திரையுலகில் மதிப்பும் மரியாதையுமாகக் கொண்டாடப்படுகிற அபூர்வமான குணச்சித்திர நடிகர், யதார்த்த திரைக்கலைஞன் காளி வெங்கட், அழியும் நிலையிலிருக்கிற ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளைக் காப்பதற்காக தாய்மையோடு தன்னை அர்ப்பணித்த சுப்ரஜா, தோட்டம் தோட்டமாகச் சென்று இளைஞர்களைத் திரட்டித் தேர்வுக்குத் தயார் அக்கறையான மீட்பன், கணேசன் என இவர்கள் அனைவரையும் எப்போதும்போல புகழ் வெளிச்சத்தில் நிறுத்துவதன் மூலம் பெருமை கொள்கிறது ஆனந்த விகடன். இவர்களை தவிர்த்து நம்பிக்கை இளைஞர் பட்டாளமும் மேடையேற இருக்கிறது.

கால் நூற்றாண்டுகளுக்கும் மேல் போராடிவரும் மனித உரிமைப் போராளி எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு பெருந்தமிழர் விருதும் வழங்கப்பட இருக்கிறது.

பிரமாண்டமான மேடையில் டாப்-10 மனிதர்கள், டாப்-10 இளைஞர்கள், பெருந்தமிழர் என இந்த ஆண்டும் சாதனையாளர்களின் கதைகள் அனைத்தும் நம் நெஞ்சுக்கு உரமாகக் காத்திருக்கின்றன. நேரில் கண்டு நெகிழ்ச்சியடைய நீங்கள் தயாரா?

சென்னை கலைவாணர் அரங்கில் பிரமாண்டமான மேடையில் டாப்-10 மனிதர்கள், டாப்-10 இளைஞர்கள், பெருந்தமிழர் எனச் சாதனையாளர்களுக்கு மகுடம் சூட்டும் விழா பிப்ரவரி 14-ம் தேதி நடக்கவிருக்கிறது.

பதிவு செய்யுங்கள்… அனுமதி இலவசம்!

Vikatan App-ல் பதிவு செய்ய: https://forms.gle/ebcJtSWAK84Vz9o2A?appredirect=website

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *