"நரகத்திற்கு வரவேற்கிறோம்" – அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்; போர் முனையில் 2,500 கடற்படையினர்!

Spread the love

இஸ்ரேலும் – அமெரிக்காவும் கூட்டு சேர்ந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து தொடங்கிய இந்தப் போர் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பாகிஸ்தானில் சந்தித்துப் போரை நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதே வேளையில், மேற்கு ஆசியாவில் தரைவழித் தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியானது.

யுஎஸ்எஸ் திரிபோலி
யுஎஸ்எஸ் திரிபோலி

அதை உறுதிப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் பிரமாண்டமான ‘யுஎஸ்எஸ் திரிபோலி’ (USS Tripoli) போர்க்கப்பல் மேற்கு ஆசியப் பகுதிக்கு வந்தடைந்தது. அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. மறுபுறம், லெபனானின் தெற்குப் பகுதியில் தனது ஊடுருவலை விரிவாக்கவும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைக்கவும் இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.

இந்த விவகாரம் தீவிரமான நிலையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப், “அமெரிக்கத் வீரர்கள் தரைவழியாக வருவதற்காக ஈரானியப் படைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. அவர்களைத் தீயிட்டுக் கொளுத்தவும், அவர்களது பிராந்தியக் கூட்டாளிகளை நிரந்தரமாகத் தண்டிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். எங்களது ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன. எங்களது உறுதியும் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

முகமது பாகர் கலிபாப்
முகமது பாகர் கலிபாப்

இதற்கிடையில் கடந்த சனிக்கிழமையன்று யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது, பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாக நடக்கும் கடல்சார் வணிகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதியைக் கையாளும் கார்க் தீவைக் (Kharg Island) கைப்பற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின.

இதற்குப் பதிலடியாக, ஈரானின் அரசு நாளிதழான ‘தி டெஹ்ரான் டைம்ஸ்’, தனது முதன்மைப் பக்கத்தில் “நரகத்திற்கு வரவேற்கிறோம்” எனத் தலைப்பிட்டு, “ஈரான் மண்ணில் கால் வைக்கும் அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டியில்தான் திரும்புவார்கள்” என உளவியல் ரீதியான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சனிக்கிழமையன்று சவூதி அரேபியாவிலுள்ள இளவரசர் சுல்தான் விமானத் தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன AWACS விமானம் சேதமடைந்தது. இது மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் வான்வழி ஆதிக்கத்திற்குப் பலத்த அடியாகக் கருதப்படுகிறது. இப்போருக்காக அமெரிக்கத் பாதுகாப்புத் துறை, நாடாளுமன்றத்திடம் கூடுதலாக 200 பில்லியன் டாலர் நிதியைக் கோரியுள்ளது.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *