திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்த கடம்போடு வாழ்வு கிராமத்திற்கு 9 பேர் கொண்ட மர்ம கும்பல் நேற்று இருசக்கர வாகனங்களில் வந்தனர். அவர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய அந்த கும்பல், அவர்களது வாகனத்தையும் பறித்துச் சென்றது. இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் அந்தக் கும்பல் நாங்குநேரி பெரும்பத்துக் கிராமத்திற்குச் சென்றது. அங்கு ஒரு டீக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய அந்தக் கும்பல், பீதியடைந்து ஓடிய மக்களை விரட்டிச் சென்று சரமாரியாக தாக்கியது. இந்த சம்பவத்தில் வடமாநிலத் தொழிலாளி உள்பட இருவர் படுகொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக காவல்துறை 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில், “திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது.