நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்.
6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் நாங்குநேரி கொலைகள் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” நேற்று இரவு நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது.
வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் வன்முறையையும் சாதிய பெருமிதங்களையும் விஷமாக விதைத்து வளரும் அடுத்த தலைமுறையின் கனவுக்குள்ளும் நீங்கா சமூக பதற்றத்தை சமூக இடைவெளியை திட்டமிட்டு உருவாக்க முயலும் அத்தனை சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு பெரும் உக்கிரத்தோடு அவர்களை அடக்கி ஒடுக்கி சிறைப்படுத்தி வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற தமிழகத்திற்கான நம்பிக்கையையும் உத்திரவாதத்தையும் உருவாக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலினையும், உதயநிதி ஸ்டாலினையும் டேக் செய்திருக்கிறார்.