நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: டெல்லியில் பிரதமர், சென்னையில் முதல்வர் தேசியக் கொடி ஏற்றி மரியாதை | Independence Day celebrations across the country

1373189
Spread the love

புதுடெல்லி/ சென்னை: நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் நேற்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலினும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க, பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அப்போது எம்.ஐ-16 ரக ஹெலிகாப்டர்களில் இருந்து மலர்கள் தூவப்பட்டன. அனைத்து ஹெலிகாப்டர்களிலும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற வாசகத்துடன் கூடிய கொடி பறந்தது.

இதை தொடர்ந்து, பிரதமர் நிகழ்த்திய சுதந்திர தின உரையில், ஜிஎஸ்டி வரி குறைப்பு, பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம், சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். பின்னர், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். முன்னதாக, காலையில் மகாத்மாகாந்தி நினைவிடத்தில் பிரதமர் மரியாதை செலுத்தினார்.

தலைமை தளபதி, முப்படை தளபதிகள், மத்திய அமைச்சர்கள், பல்வேறுகட்சிகளின் தலைவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகள் என 5,000-க்கும் மேற்பட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் விழாவில் பங்கேற்கவில்லை.

‘வீடுதோறும் கொடி ஏற்றுவோம்’ (ஹர் கர் திரங்கா) என்று பிரதமர் விடுத்த அழைப்பை ஏற்று, நாடு முழுவதும் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ணக் கொடியை உற்சாகத்துடன் பறக்கவிட்டனர்.

103 நிமிடங்கள் உரை நிகழ்த்திய பிரதமர்: நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, கடந்த 1947-ல் கொண்டாடப்பட்ட முதலாவது சுதந்திர தின விழாவில் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு 72 நிமிடங்கள் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். கடந்த 2015-ம் ஆண்டு சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 88 நிமிடங்களும், கடந்த 2024-ல் 98 நிமிடங்களும் பேசினார். நேற்றைய விழாவில் பிரதமர் மோடி 103 நிமிடங்கள் உரை நிகழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

சென்னையில் கோலாகலம்: சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் 119 அடி உயரமுள்ள கம்பத்தில் முதல்வர் ஸ்டாலின், தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், சுதந்திர தின உரை நிகழ்த்திய முதல்வர், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.22,000 ஆக உயர்வு, தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் உயர்வு, மலைப்பகுதிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் விரிவாக்கம் என்பது உட்பட9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். பின்னர், பல்வேறு விருதுகளை வழங்கினார். மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.

17552835991138
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் 119 அடி உயரமுள்ள கம்பத்தில் முதல்வர் ஸ்டாலின், தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, துணை முதல்வர் உதயநிதி, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்ட எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், தலைமைச் செயலர் முருகானந்தம், துறை செயலர்கள், டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடந்த 2021-ல் முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின் 5-வது முறையாககோட்டையில் தேசியக்கொடி ஏற்றிவைத்தது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டை வளாகத்தில் நேற்று 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் சிறிய ரக ஏவுகணைகள், வாகனங்களில் வெடிகுண்டுகளை கண்டறியும் சிறப்பு ஸ்கேனர்கள், முக அடையாளத்தை காண்பிக்கும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவை செங்கோட்டை வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்தன. கடந்த 14-ம் தேதி இரவு முதல் செங்கோட்டை வளாக பகுதியில் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

அதேபோல, சென்னையில் சுதந்திர தின விழா நடைபெற்ற கோட்டை கொத்தளம் பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல்வர் வரும் பாதை முழுவதும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. சென்னையில் 9,100 போலீஸார் உட்பட தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முக்கிய பேருந்து, ரயில், விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *