இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ராகுல் காந்தி செயல்படுவதாக அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, இட ஒதுக்கீடு குறித்து பேசிய கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில், “நாட்டைப் பிளவுபடுத்த சதி செய்யும் சக்திகளுடன் நிற்பதும், தேசவிரோத அறிக்கைகளை வெளியிடுவதுமே, ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு பழக்கமாகிவிட்டது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள தேசிய மாநாடு கட்சியின் தேச விரோத மற்றும் இடஒதுக்கீடு எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை ஆதரிப்பது அல்லது வெளிநாட்டு தளங்களில் இந்தியாவுக்கு எதிரான அறிக்கைகளை வெளியிடுவது என எதுவாக இருந்தாலும், ராகுல் காந்தி எப்போதும் நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்துகிறார்.
Standing with forces that conspire to divide the country and making anti-national statements have become a habit for Rahul Gandhi and the Congress party. Whether it is supporting the JKNC's anti-national and anti-reservation agenda in J&K or making anti-India statements on…
— Amit Shah (@AmitShah) September 11, 2024
பிராந்தியவாதம், மதம், மொழியியல் வேறுபாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தும் காங்கிரஸின் அரசியலை, ராகுல் காந்தியின் அறிக்கை அம்பலப்படுத்தி விட்டது.
நாட்டில் இடஒதுக்கீட்டை ஒழிப்பது பற்றி பேசுவதன் மூலம், இடஒதுக்கீட்டிற்கு எதிரான காங்கிரஸின் முகத்தை, முன்னணியில் கொண்டு வந்துள்ளார், ராகுல். அவரது மனதில் இருந்த எண்ணங்கள் இறுதியில் வார்த்தைகளாக வெளிப்பட்டன.
பாஜக இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் ரத்து செய்ய முடியாது; மேலும், நாட்டின் பாதுகாப்பை யாரும் சீர்குலைக்க முடியாது என்று ராகுலுக்கு சொல்ல விரும்புகிறேன்’’ என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அந்நாட்டு தலைநகா் வாஷிங்டனில் உள்ள ஜாா்ஜ்டவுன் பல்கலைக்கழக மாணவா்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது, “பாகுபாடு இல்லாத இந்தியா உருவாகும்போது இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் சிந்திக்கும். ஆனால் அந்தச் சூழல் தற்போது இல்லை’’ என்று கூறியிருந்தார்.