இந்தத் தலம் குறித்த புராணச் சம்பவம் ஒன்று சொல்லப்படுகிறது. சனி பகவானின் அதிதேவதை யமன். ஒருமுறை யமனையும் சனி தோஷம் பிடித்ததாம். இதனால் அவர் தன் கடமைகளைச் செய்ய இயலாமல் தவித்தார். அப்போது, சனி தோஷம் நீக்கும் தலம் எது என்று அவர் தேவகுருவைக் கேட்டபோது, ‘தலைமலையில் இருக்கும் கன்னிமார் சுனையில் நீராடி, அங்கு சுயம்புவாய்த் தோன்றியிருக்கும் வேங்கடாசலபதியை வணங்கினால் அனைத்து தோஷங்களும் நீங்கும்’ என்று அறிவுறுத்தினார். யமனும் அதன்படியே செய்ய, அவரைப் பீடித்திருந்த சனி தோஷம் விலகியது என்கிறார்கள் பக்தர்கள்.
அப்படிப்பட்ட மகிமையான பெருமாளின் சந்நிதியை அடைந்தால் தீப ஒளியில் மிளிரும் பெருமாளின் திருமேனியைத் தரிசனம் செய்யலாம். உள்ளே இரண்டு மூலவர்கள். ஒருவர் சுயம்புவாய் உதித்த மூர்த்தி. மற்றொருவர் பூதேவி ஸ்ரீதேவி சமேதராய்ப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட மூர்த்தி.

சுயம்புமூர்த்தியின் காலம் மிகவும் பழைமையானது. இந்த மூலவருக்கு அபிஷேகங்கள் இல்லை. மற்றவருக்கே அனைத்து அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.
மகாலட்சுமி தாயாருக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. அன்னையின் தரிசனம் அனைத்து மனக்கவலைகளையும் போக்கும் அருமருந்தாகத் திகழ்கிறது.
இந்தத் தலத்தில் ஒருமுறை மலையேறி வந்து வேண்டிக்கொண்டாலே துன்பங்கள் எல்லாம் நம்மைவிட்டு நீங்கிவிடும். குழந்தை வரம் வேண்டுபவர்கள், கடன் பிரச்னைகளில் சிக்கித் தவிப்பவர்கள், பகைவர்களின் தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், விரைவில் தங்களின் துயர் நீங்கப் பெறுவர். நன்மைகள் நிறைந்த வாழ்வைப் பெறுவ தோடு வாழ்க்கைக்குப்பின் பிறவிப் பிணியும் தீரும் என்கின்றனர் பக்தர்கள்.
இந்த மலையின் அற்புதம் உணர்ந்த மக்கள், இங்கு பௌர்ணமி தினங்களில் மலையடி வாரப் பகுதியில் உள்ள பாதையில் கிரிவலம் வருகிறார்கள். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை தலைமலை சென்று சஞ்ஜீவராயபெருமாளை தரிசனம் செய்து வாருங்கள். வாழ்க்கை நலமாகும் வளமாகும்.