மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் பங்குச் சந்தை கட்டுபாட்டு வாரியமான செபி மீண்டும் அதிரடியான ஒரு மாற்றத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நாமினி (வாரிசுதாரர்) தொடர்பாக பல காலமாகவே குழப்பங்கள் இருந்துவந்தன.
10, 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் நாமினி தொடர்பான விவரங்கள் சரியாகவே குறிப்பிடப்படாமல் இருந்தது. இதனால் முதலீட்டாளர் காலமானபிறகு அந்த முதலீடு அவருக்கு அடுத்து யாருக்குப் போய்ச் சேரவேண்டும் என்பதில் பல குழப்பங்கள் இருந்ததன.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு இது பெரும் பிரச்னையாக உருவெடுத்தபோது, மியூச்சுவல் ஃபண்டில் நாமினி தொடர்பாக பல புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்தது. ஒரு முதலீட்டாளர் ஒன்று, இரண்டு நாமினிகளுக்குப் பதிலாக 10 பேர் வரை நாமினியாக நியமிக்கலாம் என புதிய உத்தரவைப் பிறப்பித்தது.

ஆனால், 10 பேரை நாமினியாக நியமிப்பது பல முதலீட்டாளர்களுக்கும் சாத்தியப்படவில்லை. அதிகபட்சமாக 3 அல்லது 4 பேரை மட்டுமே நாமினியாக நியமிக்கவே செய்தனர். இதனை ஆராய்ந்து பார்த்த செபி, இப்போது நாமினியாக நியமிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 10-லிருந்து 4 பேராகக் குறைக்கலாமா என யோசித்து வருகிறது.
தற்போது நாமினியாக நியமிக்கப்படுகிறவரின் பெயர், உறவு, மெயில் முகவரி, தொலைபேசி எண், முதலீட்டாளரின் பணம் எவ்வளவு சதவிகிதம் நாமினிக்குப் போய்ச் சேரவேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் குறிப்பிட வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன. ஆனால், இனிவரும் நாள்களில் நாமினியின் பெயர், முதலீட்டாளருடன் அவருக்கு இருக்கும் உறவு என்கிற இரண்டு விஷயங்களை மட்டும் குறிப்பிட்டால் போதும்; மற்ற தகவல்களை விரும்பினால் மட்டும் தரலாம் என விதிமுறையை மாற்ற யோசித்து வருகிறது.