ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி வெள்ளிக்கிழமை காலை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முதுகலை ஆராய்ச்சிப் பட்டம் பெற்றிருக்கும் இவர், 13 ஆண்டுகளாக தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி உள்ளார். தற்போது, முழுநேர அரசியலில் உள்ள சீதாலட்சுமி, இயற்கை விவசாயம் மற்றும் மீன் வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவால் வரும் பிப்ரவரி 5- ஆம் தேதி, ஈரோடு கிழக்கில் 2-ஆவது முறையாக இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 2021 மற்றும் 2023 என ஈரோடு கிழக்கு தொகுதியில் இரண்டு முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை ஆளும் திமுகவே களம் காண்கிறது. திமுக வேட்பாளராக இந்த தொகுதியின் முதல் சட்டப் பேரவை உறுப்பினரான (2011) வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவித்துள்ளது. இதுவரை 9 சுயேச்சைகள் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.