நாளை சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. வானியல் நிகழ்வுகளில் முக்கியமானதாகக் கருதப்படும் சந்திர கிரகணம் சாஸ்திர அடிப்படையிலும் முக்கியத்துவம் பெறுகிறது.
குறிப்பாக நவகிரகங்களில் ராகுவும் கேதுவும் சாயா (நிழல்) கிரகங்கள் என்று சொல்லப்படுகின்றன. சூரியன், சந்திரன் ஆகியன ராகுவோடும் கேதுவோடும் இணைந்திருக்கும் காலத்தில் கிரகணங்கள் தோன்றும்.
சூரியன், சந்திரன் ஆகியன ராகுவுடன் இணைந்திருந்தால் சூரிய கிரகணமும் சந்திரனுடன் கேதுவோடும் சூரியன் ராகுவோடும் இருந்தால் சந்திரகிரகணம் தோன்றும் என்பதை நம் பஞ்சாங்கங்கள் மூலம் ஜோதிடர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கணித்திருக்கின்றனர்.
அதாவது அமாவாசை நாளில் சூரிய கிரகணமும் பௌர்ணமி நாளில் சந்திரகிரகணமும் தோன்றும்.

அந்த வகையில் நாளை சந்திரகிரகணம் நிகழ இருக்கிறது. நாளை பௌர்ணமி மாலை 5.52 மணிக்கு உள்ளது. இந்த நேரத்தில் சந்திரன் கேதுவுடன் இணைந்து இருக்கிறார். ராகுவோடு சூரியன், செவ்வாய், புதன் ஆகியோர் இணைந்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட கிரக சேர்க்கை மிகவும் அபூர்வமானது. சூரியன் ராகுவோடு இருக்கும் காலத்தில் கிரகணங்கள் வந்தால் அரசு, அரசாங்கம், போர் போன்ற விளைவுகள் உண்டாகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் கடந்த பிப் 17 ம் தேதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது.
தற்போது சந்திரகிரகணம் நிகழ்கிறது. இந்தக் கிரகணம் முடிந்தபின் சூரிய கிரகணத்துக்குப் பின் தோன்றிய போர், பொருளாதாரச் சரிவு போன்ற பிரச்னைகள் பலவும் முடிவுக்கு வரும் என்பது ஜோதிடர்களின் நம்பிக்கை.
அந்த வகையில் நாளைய சந்திரகிரகணம் முக்கியத்துவம் பெறுகிறது.
நாளை பிற்பகல் 3.20 மணிக்குக் கிரகணம் ஆரம்பித்து இரவு 7 மணி 53 நிமிடம் வரை நிகழும். இந்தக் கிரகணம் இந்தியாவில் தெரியும். எனவே நம்மால் மாலை வேளையில் ஆறு மணிக்கு மேல் இந்தக் கிரகணத்தைக் காணமுடியும். கிரகணம் தெரியும் என்பதால் அதற்குரிய சடங்குகளைச் சொல்கிறது சாஸ்திரம்.