ஒன்று தமிழ் தெரிந்த நாயகிகளை தேர்வு செய்திருக்கலாம். அல்லது இன்னும் தமிழில் பேச பயிற்சி அளித்திருக்கலாம். கதாநாயகன் துல்கர் சல்மானிடமும் இதே பிரச்சனை. பேச்சு மொழி தமிழில் பேசும்போது அவரால் அவரின் உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்த முடிகிறது ஆனால் தூய தமிழ் அவருக்கு வரவில்லை. யோசித்துப் பார்த்தால் இந்த படத்திற்கு ஏன் தூய தமிழில் டயலாக் வேண்டும்?
1950ல் பராசக்திக்கு பிறகே பேச்சுத் தமிழ் படங்களில் அதிகமாக இருந்தது. இன்றைய தேதியில் அந்த காலம் போல் தூய தமிழில் பேசி பயிற்சி எடுத்தவர்கள் நடிகர்களிலும் இல்லை, பின்னணி பேசுபவர்களும் இல்லை. அவர்கள் பேசும்போது ஒரு செயற்கைத்தனம் தெரிகிறது. அதுவே மிகவும் எரிச்சலூட்டுகிறது.

அடுத்ததாக குரு கதாபாத்திரம் சமுத்திரக்கனி அவரின் ஸ்டாக் எக்ஸ்பிரஷன் மூலமே அதன் அழுத்தத்தை நமக்கு கடத்தலாம் என்று நினைத்திருக்கிறார். இது போன்றது ஒரு பாதித்திரம் தான் ஆடுகளம் படத்தில் வரும் வேட்டைக்காரன் கதாபாத்திரம் ஆனால் அதில் நடித்திருக்கும் ஜெயபாலன் மீது வரும் கோபம், பரிதாபம் இவரின் பாத்திரத்தின் மீது வர மறுக்கிறது. காரணம் பாதி படத்திற்கு மேல் வெறும் முகச்சுழிப்பும், வெறித்த பார்வையும் மட்டுமே நமக்கு அளிக்கிறார்.
உண்மையில் இந்த படம் முடிந்த போது மிகவும் வருத்தமாக இருந்தது. படத்தின் கதாபாத்திரங்களையும் அவற்றின் முடிவையோ நினைத்தில்லை. எவ்வளவு அழகான கதை, எவ்வளவு அடுக்குகள் கொண்ட கதாபாத்திரங்கள், எத்தனை வகையில் விரியக்கூடிய முரண்கள் – அனைத்தும் ஒரு குழப்பமான திரைக்கதையினால் வேண்டிய வரவேற்பை பெறாமல் போய்விட்டதே என்றுதான்.