`நிகிதாவையும் அவருடன் பேசிய உயரதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும்' – மடப்புரம் அஜித்குமாரின் தாயார்

Spread the love

திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் கடந்த ஆண்டு ஜூன் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.

தமிழகத்தை உலுக்கிய இந்த கொலை வழக்கில் தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

`இது காவல் மரணம் தான் நகை திருடு போகவில்லை, டிஎஸ்பி அழைத்து பேசியதால் தான் பிரச்சினை தீவிரமாகியிருக்கிறது’ என சிபிஐ நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இதையொட்டி அஜித்குமாரின் குடுமத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

இது குறித்து அஜித்குமாரின் தாய் மாலதி, “என் மகன் திருடவில்லையென சிபிஐ நீதிமன்றத்தில் சொல்லியிருப்பது சந்தோஷம். என் மகனை கோவிலுக்குள்ளேயே அடித்திருக்கிறார்கள், 11 மணிக்கு கைது செய்திருக்கிறார்கள். எனக்கு 4.30 மணிக்கு தெரிய வந்து காவல்நிலையத்திற்கு சென்றேன். விசாரித்து விட்டு அனுப்பி விடுவோம் என காவல்துறையினர் சொன்னார்கள்.

என்னுடைய வீட்டையும் சோதனை செய்து விட்டு என்னுடைய இன்னொரு மகன் நவீனையும் அழைத்து சென்று அடித்திருக்கிறார்கள்.

அடித்து விட்டு தண்ணீர் கூட கொடுக்கவில்லை, தண்ணீர் கூட கொடுக்க கூடாது என என சட்டத்தில் உள்ளதா? இயல்பாக வரக்கூடிய சிறுநீர், மலத்தை கூட கட்டயாமாக வரவழைத்திருக்கிறார்கள்

நிகிதா பொய் புகார் கொடுத்ததால் தான் இப்படி நடந்திருக்கிறது. அவரை கைது செய்ய வேண்டும். அவருடன் பேசிய உயரதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும். கைதான ஐந்து பேரையும் வெளியே விட கூடாது, வெளியே வந்தால் சாட்சிகளை அழித்து விடுவார்கள்.”என்றார்

இது தொடர்பாக வழக்கறிஞர் கணேஷ் பேசும் போது, “காவல்நிலையத்தில் நிகிதா பொய் புகார் அளித்தும் ஏன் இவ்வளவு பெரிய நடவடிக்கை எடுத்தார்கள். அதற்கான காரணம் தெரிய வேண்டும். நிகிதா யோசித்துதான் வழக்கு கொடுத்திருக்கிறார். நகை வந்தால் அதை பிரித்து கொள்ளலாம் என ஒரு நபர் சொல்லியிருக்கிறார். அந்த நபர் குறித்து விசாரிக்க வேண்டும்.

அஜித்குமார் போன் எங்கே, மற்ற காவலர்களின் போன் எங்கே , காவலர்கள் வீடியோ எடுத்தனர் அவர்களுடைய போன் குறித்து விசாரிக்க வேண்டும்.

இதற்கு முன் இதே போல இந்த ஊரில் ஆறு பேர் காவல்துறையினால் அடித்து கொல்லப்பட்டடிருக்கிறார்கள். யாரும் புகார் கொடுக்கவில்லை இந்த மக்களுக்கு சட்டம் குறித்து அறிவு இல்லை. இதனாலேயே இது குறித்து கேள்வி கேட்க முடியவில்லை.

இதில் அஜித்குமாரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அடித்ததற்காக இழப்பீடு வழங்குகிறோம் என சொன்னார்கள். 6 மாதமாகிறது இன்னும் எதுவும் வரவில்லை” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *