ஆனால், சீபர்ட் மட்டும் அப்படியே அதிரடியாக ஆடி அரைசதத்தை கடந்தார். பெத்தேலை கொஞ்சம் நியாபகப்படுத்தினார். ஆனால், கடந்த போட்டியை போல் அல்லாமல் இந்த முறை வருண் கொஞ்சம் நன்றாக வீசினார். அவரின் பந்தில் சீபர்ட் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் வெற்றி ஏறக்குறைய உறுதி ஆனது என தோன்றியது
72-5 என்ற நிலையில் நியூசிலாந்து தடுமாறிய போது கேப்டன் சாண்ட்னரும் டேரில் மிட்செலும் கூட்டணி சேர்ந்தனர். இருவரும் இந்திய அணியின் ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொண்டு அதிரடியாக ஆடி இறுதிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். எட்ட வேண்டிய இலக்கு மிகப்பெரிதாக இருந்ததால், இவர்களின் போராட்டம் பெரிதாக கைகொடுக்கவில்லை. டேரில் மிட்செல் அக்சரிடமே வீழ்ந்தார். சாண்ட்னரால் தோல்வி வித்தியாசத்தை மட்டுமே குறைக்க முடிந்தது.
நியூசிலாந்து அணி எவ்வளவோ போராடினாலும் முடிவு இந்தியாவுக்கு சாதகமாகவே அமைந்தது. அக்சர் படேல் மிகச்சிறப்பாக வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பும்ரா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்திய அணி உலகக்கோப்பையை தக்கவைத்திருக்கிறது. இது இந்திய அணி வெல்லும் மூன்றாவது டி20 உலகக்கோப்பை. ஆனால், மூன்று உலகக்கோப்பைகளில் இந்த உலகக்கோப்பை கொஞ்சம் ஸ்பெஷல். ஏனெனில், சொந்த மண்ணில் இந்திய ரசிகர்களின் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் இந்திய வீரர்களின் கையில் தவழும் முதல் டி20 உலகக்கோப்பை இது. வாழ்த்துகள் டீம் இந்தியா!