`நீங்கள் வரத்தான் போகிறீர்கள்' – ப.சிதம்பரத்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூசகம்!

Spread the love

பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்திருந்தார். நலதிட்ட உதவிகளை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாகரிகம் ஓங்கியிருந்ததற்கு தடயங்கள் கிடைத்த மண், கீழடி. கழனிவாசலில் ரூ.32 கோடியில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை திறந்து வைக்க உள்ளேன்.

மத்திய அரசு, மதுரை எய்ம்ஸ்-க்கு அடிக்கல் நாட்டி 11 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் நான் காரைக்குடியில் ரூ.100.45 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சட்டக்கல்லூரியை திறந்து வைத்துள்ளேன். சிதம்பரம் பேசும்போது அடுத்தும் வருவேன் என்றார்… நீங்கள் வரத்தான் போகிறீர்கள் அதில் என்ன சந்தேகம்.

தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது என்று நான் சொல்வதல்ல… மத்திய அரசினுடைய புள்ளி விவரங்கள்தான் சொல்கிறது. புதிதாக தொழில் தொடங்குவதை ஊக்குவிப்பதாகவும், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி என தமிழ்நாட்டை மத்திய அரசு பாராட்டுகிறது. இதையெல்லாம் ஆளுநரும், பிரதமரும் படிக்க வேண்டும், படிக்காமல் போய் விடாதீர்கள்.

சிவகங்கை கிராமங்கள் நிறைந்த மாநிலம். கிராமத்தின் முதுகெலும்பாக இருந்த மகாத்மா காந்தி நூறு நாள் திட்டத்தை காலி செய்து விட்டு வேறு பெயரில் வேறு வடிவில் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு மகாத்மா காந்தியையும் பிடிக்காது, மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

நடைமுறையிலிருக்கிற 100 நாள் திட்டத்தையே 50 நாள்கள்கூட கொடுப்பதில்லை, மாநிலங்களுக்கான நிதியை விடுவிப்பதில்லை. இதில் தற்போது 125 நாள்கள் வேலை கொடுப்போம் என்கிறார்கள். அதற்காக தற்போதுள்ளதை விட இரண்டரை மடங்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், மத்திய அரசு அதற்கு தயாராக இருக்கிறதா?

இவர்கள் சொல்வதெல்லாம் மாயைதான். சொல்வது தான் சொல்கிறீர்கள் 325 நாள்கள் என்று சொல்லுங்கள். மாகத்மா காந்தி நூறு நாள் திட்டத்தினால் தமிழ்நாட்டில் கடந்தாண்டு 65 லட்சம் பேர் பயனடைந்திருக்கிறார்கள், 15 ஆயிரம் கோடி வரை ஊதியம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது கொண்டுவந்துள்ள புதிய திட்டத்தில் பாதி பேருக்கு வேலை கொடுப்பதே சிரமம்தான்.

மாநில அரசு வேலை நாள்களையும் முடிவு செய்ய முடியாது, மத்திய அரசு தான் முடிவு செய்வார்கள். போதாக்குறைக்கு மாநிலங்கள் 40 சதவிகிதம் நிதியைக் கொடுக்க வேண்டும் என்கிற பெரிய தாக்குதலை நம்மீது தொடுக்கிறார்கள்.

மத்திய அரசு தன் கடமையிலிருந்து ஓடுகிறது, கிராமங்களை கைகழுவி விடுகிறது. இதை எதிர்த்து நாம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். இந்த திட்டத்தை அவர்கள்  திரும்பப் பெற வேண்டும். மக்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் துணையோடு  வாபஸ் பெற வைப்போம்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கு குரல் கொடுக்க முடியாத பழனிசாமி நம்முடைய திட்டங்களை காப்பி அடித்து அவர் புதிய வாக்குறுதிகள் எனச் சொல்லி வருகிறார்.

ஏற்கெனவே அதிமுக தேர்தல் வாக்குறுதிகளில் சொன்ன எதையும் அவர்கள் செய்யவில்லை. 2011 தேர்தல் அறிக்கையில் சென்னை முதல் குமரி வரை கனரக சாலை திட்டம், தென் தமிழகத்தில் ஏரோ பார்க், 58 வயது மேற்பட்டவர்களுக்கு பஸ் பாஸ் எனச் சொன்னார்கள்… அவற்றையெல்லாம் செய்யவில்லை.

2016 தேர்தல் வாக்குறுதியில்  இலவச வைபை, ரேசன் கார்டுகளுக்கு இலவச போன், அம்மா பழுது பார்க்கும் மையம் என சொன்னார்கள் அதை அவர்களே மறந்து  விட்டார்கள். நாங்கள் சொன்னவற்றை எல்லாம் செய்திருக்கிறோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *