குளறுபடிகள் நிறைந்த நீட்தேர்வை ரத்து செய்க்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் தி.மு.க. மாணவரணி சார்பில் வருகிற 24-ந்தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க.மாணவர் அணி
இது தொடர்பாக தி.மு.க.மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ.வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
-நீட் தேர்வு என்பது ஏழை-எளிய மாணவர்களை தகுதி என்ற பெயரில் மருத்துவக் கல்வி பயிலவிடாமல் ஓரங்கட்ட பாசிச பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட தேர்வு. சமூகநீதிக்கு எதிரான தேர்வு முறை சமத்துவம் இல்லாத தேர்வு முறை கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பை மறுக்கக்கூடிய தேர்வு முறை அவர்களது கல்வி உரிமைக்கு தடை போடும் தேர்வு முறை அவர்களது மருத்துவக் கனவைச் சிதைத்து, “நீ டாக்டர் ஆக முடியாது” என்றும், “உனக்குத் தகுதியில்லை” என்றும் கூறி, தடுப்புச் சுவர் எழுப்புகிறது.
மேலும், நீட் தேர்வு என்பதே ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு சாதகமாகவும், வசதி படைத்தோருக்கும் மட்டுமே பயனடையும் வகையில் உருவாக்கப்பட்ட தேர்வு முறை. ஆள்மாறாட்டம் செய்வது வினாத் தாள்களை திருடுவது விடைத்தாள்களை மாற்றி வைப்பது மதிப்பெண்கள் வழங்குவதில் குளறுபிடிகள் என்று இத்தேர்வே முழுமையான மோசடியாக உள்ளது. இதனை முன்பே அறிந்ததால் தான் தி.மு.க. நீட் தேர்வை ஆரம்பம் முதல் எதிர்த்து வருகிறது.
முறைகேடு
இந்த ஆண்டு, இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை, கடந்த மே 5-ஆம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் 4,750 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 4ம் தேதியே முடிவுகள் வெளியாகின.
மற்றும் குளறுபிடிகளை உணர்ந்த பா.ஜ.க.வை சேராத அரசியல் கட்சிகள், பிற மாநில அரசுகள், ஏன் ஒட்டுமொத் இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு கல்வியாளர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் நீட் தேர்வை கடுமையாக எதிர்க்க தொடங்கி விட்டனர். நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாட்டில் தொடங்கிய அதிர்வலைகள் இன்று இந்தியா முழுவதும் பரவியிருப்பதை காண முடிகிறது.
ஆரப்பாட்டம்
நீட் தேர்வில் நடைபெற்ற மோசடிகளால் இந்தியா முழுவதும் எதிர்ப்பலை கிளம்பியுள்ளது. நீட் தேர்வு என்பதே பெரும் மோசடி என்பதைத் தான் கழகத் தலைவர் அவர்கள் வலியுறுத்தி அதனை கடுமையாக எதிர்த்து வருகிறார். நீட் தேர்வே தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதற்காக நிறைவேற்றி அனுப்பியிருக்கும் சட்டமசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும்.
நீட் தேர்வில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய மோசடிகளை, குளறுபிடிகளை களைவதற்கு மேல்நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நீட் எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், நீட் தேர்வை நடத்தியே தீருவேன் என்ற எதேச்சதிகாரப் போக்கினை கடைபிடிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசை கண்டித்து கழக மாணவர் அணிச் சார்பில் வரும், 24.06.2024 அன்று காலை 9 மணியளவில், சென்னை, வள்ளூவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஆர்ப்பாட்டத்தில், கழக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று, போராட்டத்தை வெற்றியடையச் செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்: