நீண்ட தூர ரயில்களில் பயணிகள் மொபைல் போன் மற்றும் லேப்டாப்களை சார்ஜ் செய்து கொள்ள சார்ஜிங் பாயிண்ட் வைக்கப்பட்டுள்ளது. அதனை வேறு எந்த தேவைக்கும் பயன்படுத்தக்கூடாது. ரயிலில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கூட எடுத்துச்செல்லக்கூடாது. ஒரு முறை ரயிலில் தீப்பிடித்தததால் நீண்ட தூர ரயிலில் சமையலுக்கு கூட தடை விதிக்கப்பட்டு இருந்தது.
அப்படி இருக்கும்போது பெண் பயணி ஒருவர் ரயில் பயணத்தில் தான் கொண்டு வந்திருந்த எலக்ட்ரிக் சாதனத்தை பயன்படுத்தி நூடுல்ஸ் தயாரித்து சாப்பிட்டுள்ளார். நூடுல்ஸ் தயாரித்து சாப்பிட்டதோடு மட்டுமல்லாது அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அப்பெண் ஏ.சி.பெட்டியில் பயணம் செய்தபடி இக்காரியத்தை செய்தார். அவர் பகிர்ந்த வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் அப்பெண் பேசிக்கொண்டே எலக்ட்ரிக் சாதனம் மூலம் தண்ணீர் சுட வைக்கிறார்.
எங்கு வேண்டுமானாலும் கிச்சனை அமைத்துக்கொள்ள முடிகிறது என்றும், 15 பேருக்கு தேநீர் தயாரிப்பதாகவும் சிரித்தபடி சொன்னார். இந்த வீடியோ குறித்து மத்திய ரயில்வே கவனத்திற்கு வந்தது. உடனே இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் யார் அந்த வீடியோவை பகிர்ந்தது என்பதை அடையாளம் கண்டு இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட நபர் மீது ரயில்வே சொத்தை தவறாக பயன்படுத்தியதாக ரயில்வே சட்டம் 147(1)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவை சரிதா என்ற பெண் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். அவர் தண்ணீர் சுட வைக்கும் பாத்திரம் மூலம் நூடுல்ஸ் தயாரித்தார்.