நாய்கள் மீது அன்பு கொண்டவர்களும், நாய்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கச் சட்டம் கடுமையாக இருக்க வேண்டும் என வாதிடுபவர்களும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என். வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர்.
அப்போது, “சாலைகளில் நாய்கள் மற்றும் தெரு விலங்குகள் இல்லாமல் இருக்க வேண்டும். நாய் கடி மட்டுமல்ல, சாலைகளில் சுற்றித் திரியும் தெரு விலங்குகளும் ஆபத்தானவையாகவும் விபத்துக்களை ஏற்படுத்துபவையாகவும் உள்ளன. எந்த நாய் எந்த மனநிலையில் இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், வழிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும்.

தடுப்பு நடவடிக்கை எப்போதும் சிகிச்சையை விட சிறந்தது. மேலும், இந்த விஷயத்தில் இனி வாதிடுவதற்கு எதுவும் இல்லை. நீதிமன்றம் தெரு நாய்களை அகற்ற மட்டுமே உத்தரவிட்டுள்ளது. எந்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளிலும் தலையிடவில்லை.
இந்த விஷயத்தில் மாநில அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் விதிகள், ஒழுங்குமுறைகள், வழிமுறைகள் மற்றும் நிலையான இயக்க நடைமுறைகளை (SOPs) கடுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்வதே நீதிமன்றத்தின் நோக்கம்” எனக் கூறியது.