நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள காட்டேரி டேம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன் – விஜயகுமாரி. இந்தத் தம்பதிக்கு மோனிஷா என்கிற மகளும், மோனிக்ராஜ் என்ற மகனும் இருந்தனர். 22 வயதான மோனிக்ராஜ் விவசாயம் செய்து வந்தார்.

இவர் கடந்த மார்ச் 11-ம் தேதி விவசாயத்திற்காக நீர் பாய்ச்சி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்மோட்டரில் சிக்கி விபத்து ஏற்பட்டது. இதில் அவருக்கு தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை, அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருந்தபோதிலும் மோனிக் ராஜின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடந்த 13-ம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அவரின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.
தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் மோனிக் ராஜின் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் ஆகியவை தானமாகக் கொடுக்கப்பட்டன.

கல்லீரல், ஒரு சிறுநீரகம் அதே மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவையில் மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும், நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன.
மோனிக்ராஜ் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். அவரது உடல் அரசு மரியாதையுடன் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.