அதே சிரித்த முகத்துடன் பேசத் தொடங்கியவர், “‘நீலோத்தி’ பாடலின் வாய்ப்பு எனக்கு ‘காற்றோடு பட்டம் போல’ பாடல் மூலமாகத்தான் கிடைத்தது. இந்தப் பாடல் இடம்பெறும் சூழலின் வலுவான கதையை எனக்கு இயக்குநர் விளக்கினார். இயக்குநராக மட்டுமல்லாமல், ஒரு தோழனாக முழு ஸ்கிர்ப்டையும் படிக்கக் கொடுத்தார். நான் வெறும் சூழலை மட்டும் படித்துவிட்டு அதனை இயக்குநரிடமே கொடுத்துவிட்டேன். மற்றொரு பக்கம், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனும் என்னை எழுதச் சொல்லி உற்சாகப்படுத்தினார். இந்தப் பாடலுக்குள் நான் சேர்க்க வேண்டிய கதை சார்ந்த விஷயங்கள் எனப் பலவற்றை இருந்தன.
இரண்டு மாற்று சமூகத்தை சேர்ந்த காதலர்கள், அப்துலின் பின்னணி, கலையரசியின் பின்னணி, தந்தையை இழந்த கலையரசியையும் அவளின் அக்காளையும் தொந்தரவு செய்யும் மாமா, அப்துலுக்காக பெரும் நம்பிக்கையோடு காத்திருக்கும் கலையரசி, இத்தனைக்கும் மத்தியில் அறத்தோடு செயல்படும் கதிரவன் என்கிற காவல் அதிகாரி, நம்பிக்கையளிக்கும் நீதியரசர் எனப் பல விஷயங்களையும் இந்தப் பாடலுக்குள் கொண்டு வர வேண்டிய கடமை எனக்கிருந்தது. இப்படியான அனைத்தையும் கொண்டு வர வேண்டும் என்பதற்காக நான் பல்லவியை மட்டும் காதலாக அமைத்திடலாம் என முடிவு செய்துவிட்டேன். இந்தப் பாடலில் அப்துலும், கலையரசியும் காதல் மூலம் சமத்துவப் பாதையை அடைகிறார்கள். சமத்துவம் என்றால் நீலம்!