நீளிரா: "எங்கு சென்றாலும் அந்த ஈழத்தை அவர்களால் உருவாக்க முடியும்" – இயக்குநர் வெற்றி மாறன்

Spread the love

கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனமும் ராணா டகுபதியின் ‘ஸ்பிரிட் மீடியா’ தயாரிப்பு நிறுவனமும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து ‘நீளிரா’ படத்தைத் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தை இலங்கைத் தமிழர் சோமிதரண் இயக்கியுள்ளார். ஏப்ரல் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் பட டிரெய்லர், கவனம் ஈர்த்து வருகிறது.

‘நீளிரா’ பட முன்னோட்ட நிகழ்ச்சி விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய வெற்றிமாறன், “வரலாறு என்பது எப்போதும் அதிகாரத்தில் இருப்பவர்களால் எழுதப்படுவது. ஆனால், கலையின் வழியாக நாம் நம்முடைய வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

நீளிரா படக்குழு
நீளிரா படக்குழு

நம்முடைய கதைகளை நாமே சொல்லாதவரை, நம் எதிரிகள் சொல்வதுதான் உண்மையாகிவிடும். அதுவே நியாயமாகவும் கருதப்படும். அந்த அடிப்படையில், ஈழத்திலிருந்து வந்த இளைஞர்கள் தங்களின் வலியையும் நினைவுகளையும் தாங்களே ஆவணப்படுத்தியிருப்பது ஒரு பெரிய ஜனநாயகச் செயல்.

இந்தப் படத்தில் ரத்தமும் சதையுமான நேரடி வன்முறை காட்சிகள் இல்லை என்று சொல்லப்பட்டாலும், இதன் ஒவ்வொரு காட்சியும் மிகத் தீவிரமான வன்முறையைத் தாங்கியிருக்கிறது.

உதாரணமாக, ராணுவம் கதவைத் தட்டும் சத்தம் கேட்டவுடன், வீட்டிலுள்ள பெண்கள் பயத்தில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கூடுதல் ஆடைகளை அணிந்து கொள்வது என்பது வன்முறையை விடவும் அதிர்ச்சியான ஒரு பதிவு.

போர்ச் சூழலில் வளரும் ஒரு குழந்தையின் மனதில் துப்பாக்கி என்பது விளையாட்டாகப் பதிந்திருப்பதையும், ஒரு ராணுவக் குழு வாசலில் வந்து அமரும்போது ஏற்படும் அந்த ஆழ்ந்த பயத்தையும் இந்தப் படம் மிகத் துல்லியமாகப் பேசுகிறது.

இந்தியத் தணிக்கைத் துறை (Sensor) போன்ற சவால்களைத் தாண்டி, சொல்ல வேண்டிய கருத்தை மறைமுகமாகச் சொல்வது ஒரு தனிப் பயிற்சி. அந்த வித்தையை இந்தப் படத்தில் செவ்வனே செய்திருக்கிறார்கள். நேரடியாக யாரையும் விமர்சிக்காமல், ஒரு அடையாள அட்டை சோதனையின் மூலமாகவோ அல்லது ஒரு கல்யாண வீட்டின் சூழல் மூலமாகவோ மிகப்பெரிய அரசியல் உண்மைகளை உரையாடியிருக்கிறார்கள்.

நீளிரா
நீளிரா

ஈழ மக்களில் போரோடு நேரடியாகத் தொடர்பில்லாதவர்களாக சிலர் இருந்தாலும், அவர்கள் யாருக்காக நிற்கிறார்கள் என்பதை ஒரு முட்டை சமைக்கும் காட்சியின் மூலம் அழகாகப் புரிய வைத்திருக்கிறார்கள்.

ஒரு போர் என்பது வெறும் நினைவுகளோடு முடிந்துவிடுவதில்லை. அது எத்தகைய மனப்போக்கை (Thought process) உருவாக்குகிறது என்பதுதான் முக்கியம். போர் என்பது ஒரு குழந்தையின் நினைவு மட்டுமல்ல, போருக்குள் சிக்கிய ஒவ்வொருவரின் நினைவும் கூட.

இந்தப் படத்தில் 70 வயது முதியவர் ஒருவரின் கதாபாத்திரம் இருக்கிறது. ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவரிடமிருந்து பறிக்கப்பட்ட நிலம் அவரிடமே மீண்டும் ஒப்படைக்கப்படுகிறது. அவரும் அவருடைய கதையும் அந்தப் போர் ஏற்படுத்திய வடுக்களைச் சொல்கின்றன.

அதுமட்டுமின்றி, போர்க்காலச் சூழலில் திருமணமான கையோடு அங்கிருந்து கிளம்பிச் செல்லும் அந்தப் பெண், அங்குள்ள புகைப்படக் கலைஞர், மற்றும் அங்கிருக்கும் இளைஞர்கள் என ஒவ்வொரு கதாபாத்திரமும் போரின் வெவ்வேறு முகங்களைக் காட்டுகின்றன.

இயக்குநர் வெற்றிமாறன் | Director Vetrimaran
இயக்குநர் வெற்றிமாறன் | Director Vetrimaran

ஒரு காட்சியில் சிறுவர்கள் துப்பாக்கியை வைத்து விளையாடும்போது, ‘துப்பாக்கி இல்லாமல் வேறென்ன விளையாடுவது?’ என்று கேட்பார்கள். ஒரு போர்ச் சூழலில் வளரும் குழந்தையின் எண்ணம் எப்படி மாறுகிறது என்பதற்கு இதுவே சாட்சி. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கிய விதம் மற்றும் அவர்கள் பேசும் நியாயங்கள் – சில நேரங்களில் அந்த நியாயங்களே பலவீனமானதாகத் தெரிந்தாலும் – அது ஒரு எழுத்தாளராக அந்தப் படைப்பாளியின் திறமையைக் காட்டுகிறது.

இன்று எல்லாமே ‘ப்ரோபகாண்டா’ (பரப்புரை) மயமாக்கப்படுகிறது. பணமதிப்பிழப்பு (Demonetization) காலத்தில் மக்கள் பட்ட துயரங்களை நாம் அறிவோம், ஆனால் அதைக்கூட ஒரு பரப்புரையின் மூலம் எளிதாக மறைத்துவிட முடியும். இத்தகைய ‘வெறுப்புப் பரப்புரைகளுக்கு’ (Hate Propaganda) எதிராக நம்முடைய உண்மையான நினைவுகளைப் பாதுகாக்க இதுபோன்ற கலைப்படைப்புகள் அவசியம்.

இயக்குநர் வெற்றிமாறன் | Director Vetrimaran
இயக்குநர் வெற்றிமாறன் | Director Vetrimaran

இந்தப் படம் வெறுப்பை விற்கவோ அல்லது வன்முறையைத் தூண்டவோ எடுக்கப்பட்டதல்ல. இது ஒரு இனத்தையோ, மதத்தையோ கேலி செய்யும் படம் கிடையாது. ஈழம் என்பது வெறும் நிலப்பரப்பு மட்டுமல்ல, அது இந்தப் படைப்பாளிகளின் இதயத்தில் இருக்கிறது. அவர்கள் எங்கு சென்றாலும் அந்த ஈழத்தை அவர்களால் உருவாக்க முடியும். மெயின்ஸ்ட்ரீம் சினிமாவில் இதுபோன்ற உரையாடல்களைத் தொடங்குவது ஒரு நல்ல ஆரம்பம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *