தி.மு.க தரப்பில் நாம் விசாரித்தால், “கடந்த முறை நாங்கள் போட்டியிட்ட இடங்கள் அளவுக்குக்கூட இந்த முறை போட்டியிடுவது கடினம். குறிப்பாக, தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் புதிதாக கூட்டணிக்குள் வந்துள்ளன. அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகளையும் அதிகரித்துள்ளோம். இதையெல்லாம் எங்கள் கணக்கிலேயே கொடுத்தால் எங்களால் தனித்து ஆட்சியைப் பிடிக்க முடியாது. நாங்கள் தொகுதிகளை விட்டுக் கொடுப்பதுபோலவே, கூட்டணிக் கட்சிகளும் தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டும் அல்லவா?” என்கிறார்கள்.
கடந்த முறை வி.சி.க ஆறு இடங்களில் போட்டியிட்டது. இந்த முறை எட்டு முதல் பத்து இடங்களை எதிர்பார்க்கிறது. தி.மு.க அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்கிறார்கள். இது குறித்து வி.சி.க தரப்பில் விசாரித்த போது, “நாங்கள் கடந்த முறை ஆறு இடங்களில் போட்டியிட்டது சரிதான். இப்போது நாங்கள் அங்கீகாரம் பெற்ற கட்சியாக வளர்ந்துள்ளோம். பத்து தொகுதிகளை எங்களுக்குத் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அதற்கு வாய்ப்பில்லை என்றால் எட்டு தொகுதிகளை எதிர்பார்த்தோம். ஆனால். தி.மு.க தரப்பில் ஐந்து தொகுதிகளை வாங்கிக்கொள்ளச் சொல்கிறார்கள். எங்களைவிட வாக்கு விகிதம் குறைவாக உள்ள தே.மு.தி.கவு-க்கு ஏழு சட்டமன்றம், ஒரு ராஜ்ய சபா என்று முடிவாகியுள்ளதாகத் தெரிகிறது. அவர்களை விட எங்களுக்குக் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்பதே கோரிக்கை” என்கிறார்கள்.
மற்றொருபுறம் ம.தி.மு.கவிடம் நான்கு தொகுதிகளை வாங்கிக்கொண்டு உதயசூரியன் சின்னத்தில் நில்லுங்கள் என்று சொல்ல, அவர்கள் ஆறு தொகுதிகள் வேண்டும் என்று மல்லுக்கட்ட ஆரம்பித்துள்ளார்கள்.
இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளை எதிர்பார்த்த கம்யூனிஸ்ட் கட்சிகளிடமிருந்து இரண்டு தொகுதிகளைப் பறிக்க முடிவை எடுத்துள்ளது தி.மு.க. தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் தேர்தல் தேதி அறிவிக்கும் வரை எண்ணிக்கையை உறுதி செய்யாமல் இழுத்தடித்து, கடைசி நேரத்தில் தாங்கள் கொடுக்கும் இடங்களை வாங்கிக்கொள்ள வைக்கும் யுக்தியை தி.மு.க கையில் எடுக்க உள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே தங்களுக்கான இடங்களை உறுதி செய்ய கூட்டணிக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன.