நெல்லை மேலப்பாளையத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அமீர் அம்சா. இவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். இவரது மகனான செய்யது தமீம் (31) மேலப்பாளையம் விஎஸ்டி பள்ளிவாசல் அருகே இணைய சேவை மையம் நடத்தி வருகிறார்.
மேலப்பாளையம் அம்பை சாலையில் உள்ள கடையில் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு இரவில் வீடு திரும்பிய செய்யது தமீம், உணவை சாப்பிட்டுவிட்டு கடையில் சிறிய வேலை இருப்பதாக சொல்லி மீண்டும் கடைக்கு சென்றுள்ளார்.
நெடுநேரம் ஆகியும் தமீம் வீடு திரும்பாத நிலையில் அவரது தந்தை கடைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கடையில் உள்ள கண்ணாடி கதவுகள் திறந்த நிலையில் இருந்துள்ளது.
மேலும் ரத்த வெள்ளத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக செய்யது தமீம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டனர்.
நெல்லை மாநகர காவல் துறையின் மோப்ப நாய் பரணி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொலை சம்பவம் நடந்த இடத்தில் தடய அறிவியல் துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
நள்ளிரவில் நடந்த இந்த கொலை சம்பவத்தினால் மேலப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இவர்களது குடும்பத்திற்கான சொத்து பல்வேறு இடங்களில் உள்ள நிலையில் சொத்து பிரச்னைக்காக இந்த கொலை நடந்துள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.