நெல்லை, மேலப்பாளையம் அருகில் உள்ளது மேலநத்தம். இங்கு பழைய அரிசி ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலைக்குச் செல்லும் சாலையின் ஓரத்தில் தெருநாய் ஒன்று சிவப்பு நிறத் துணி சுற்றப்பட்ட ஒரு பார்சலை கவ்விச் சென்று வாயால் துணியை அகற்றி எதையோ கடித்துக் கொண்டிருந்தது. அப்பகுதி வழியே சென்ற முதியவர் ஒருவர் இதைப் பார்த்துள்ளார்.

நாயின் அருகில் சென்று பார்த்ததும், அந்தத் துணிக்குள் இறந்த ஆண் சிசுவின் உடல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நாயை அவர் விரட்ட முயலவே குரைத்துக்கொண்டே அவரைக் கடிக்கப் பாய்ந்துள்ளது.
கம்பால் அடித்து நாயை விரட்டிவிட்டுள்ளார். பின்னர், மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு போனில் தகவல் கூறியுள்ளார். விரைந்து வந்த போலீஸார், உயிரிழந்த சிசுவின் உடலை மீட்டனர். அந்தச் சிசு நஞ்சுக் கொடியுடன் காணப்பட்டது.