நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முடியாத சூழல் குறித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தும்கூட முருக பக்தர்கள் மத்தியில் ஒரு மன வருத்தம் நீடிக்கிறது.
எனவே, அந்த மனக்குறையைப் போக்கிடவும் இறைவனை வேண்டிக்கொள்ளவும் விளக்கேற்றும் நிகழ்வினை ஒருங்கிணைத்துள்ளோம். தமிழகமெங்கும் வாழும் முருக பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் குத்துவிளக்கேற்றி ’கந்த சஷ்டி கவசம்’ படிக்க வேண்டுமென்று முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளோம்.

வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது உறுதி. தி.மு.க கூட்டணியின் தொகுதிப் பங்கீடுகள் மின்னல் வேகமா? முயல் வேகமா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே அந்தக் கூட்டணியில் இருப்பவர்கள்தான் இருக்கிறார்கள். புதிதாக யாரும் சேரவில்லை.
தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க ஆட்சியில் எதிர்க்கட்சிகளின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசும் கருத்துக்கள் மறைக்கப்படுகின்றன. அமைச்சர் நேரு உள்ளிட்ட பல அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை மற்றும் ஊழல் தடுப்புப்பிரிவின் வழக்குகள் உள்ளன. நீதிமன்றமே சில அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக் கூறியுள்ளது.

ஆனால், இந்த அரசு ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது. பிரதமருக்கு எதிராக தென்காசியில் பேசிய முக்கியத் தலைவரை இதுவரை இந்த அரசு கைது செய்யவில்லை. ஆனால், பா.ஜ.கவினரைச் சிறிய காரணங்களுக்காகக் கூட கைது செய்கிறார்கள்.
விரைவில் எங்களது கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேசி தொகுதிப் பங்கீடு குறித்து அறிவிப்போம். டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பல தலைவர்கள் எங்களுடன் இணைந்தே உள்ளனர். வரும் தேர்தலில் ஒரு பலமான மாற்றத்தை மக்கள் பார்ப்பார்கள்” என்றார்.