நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, “தமிழக முதல்வர் சட்டப்படி ஆட்சி நடத்தி வருகிறார். பல மாநிலங்களில் ஆளுநரை அழைக்காமலேயே சட்டமன்றம் நடத்தப்படுகிறது.
நமது முதல்வர் அதுபோன்ற முடிவை ஒருபோதும் எடுக்க மாட்டார். இவ்வாண்டும் சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு ஆளுநருக்கு அழைப்பு விடுப்போம். அவர் வருவார் என நம்புகிறோம்.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் எப்படி நடந்து கொள்கிறார்களோ, அதுபோன்று தமிழகத்திலும் நடந்து கொள்ள வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை காங்கிரஸும், தி.முகவும் கொண்டு வந்தது என்ற கோபத்தில் மத்திய அரசு பார்க்கிறது.
நாடு முழுவதும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 42 கோடி மக்கள் பயன்பெற்று வரும் நிலையில், அவர்களுக்கு ரூ.1 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டு வந்தது. இதில், தமிழகத்தின் பங்காக ரூ.10 ஆயிரம் கோடி கிடைக்கும். தற்போது இந்தத் திட்டத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடிதான் கொடுப்பேன் என்றால் எப்படி வரவேற்க முடியும்?